வாட்ஸ் ஆப் முடங்கியதற்கான காரணத்தை தெரிவித்து விளக்கம் அளிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் நேற்று பிற்பகல் 12.30 மணி முதல் வாட்ஸ்ஆப் சேவை முடங்கியிருந்தது. தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு இந்த நிலையே நீடித்தது. இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளில் வாட்ஸ்ஆப் சேவையில் கோளாறு ஏற்பட்டதைத் தொடர்ந்து தகவல்கள் பரிமாற முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் ‘Whatsappdown’ என்ற ஹாஷ்டேக் முலம் ட்விட்டர், முகநூல் போன்ற பிற சமூக ஊடகங்களில் புகார்கள் எழுந்தன. வாட்ஸ் ஆப்பில் குறுஞ்செய்தி, புகைப்படங்கள், தரவுகள் அனுப்பவும் பெறவும் முடியவில்லை என்றும், வாட்ஸ் ஆப் அழைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் வந்த வண்ணமிருந்தன.
இந்நிலையில், இந்த புகார்கள் தொடர்பாக வாட்ஸ் ஆப்பின் தாய் நிறுவனமான மெட்டா பதிலளித்தது. அதன்படி, தொழில்நுட்பக் குழுவினர் சோதனை செய்து வருவதாகவும், 24 மணிநேரத்தில் வாட்ஸ் ஆப் சேவை மீண்டும் சீராக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு மணி நேரத்திற்குள்ளாகவே, பெரும்பாலான பகுதிகளில் இயல்பாக செயல்பட ஆரம்பித்தது. இதனால் பயனர்கள் நிம்மதி அடைந்தனர்.
மேலும், வாட்ஸ் ஆப் நிறுவன தரவுகளின்படி, மும்பை , தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், லக்னௌ மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் அதிக அளவாக வாட்ஸ் ஆப் சேவை முடங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் வாட்ஸ் ஆப் முடங்கியிருந்ததிற்கான காரணத்தை கோரி மத்திய அரசு வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வாட்ஸ் ஆப் முடங்கியதற்கான காரணத்தை தெரிவித்து விளக்கம் அளிக்க மத்திய தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவை கார் வெடிப்பு சம்பவம்; தமிழக அரசின் என்ஐஏ பரிந்துரையை ஏற்ற மத்திய அரசு