மனிதர்களுக்கென ஆறுதல் சொல்ல, அன்பை தெரிவிக்க, அன்பை பெற உயிர் வடிவில் சக மனிதர்கள் மட்டும்தான் இருக்கிறார்களா என்றால்? இல்லை. சில நேரங்களில், பல மனிதர்களுக்கு செல்லப் பிராணிகள்தான் ஆறுதலாகவும், நண்பனாகவும், குழந்தையாகவும் இருக்கின்றன.
மனிதர்களைப் பொறுத்து அவர்களின் செல்லப் பிராணிகள் மாறுபடும். இந்தியாவைப் பொறுத்தவரையில், பெருமளவில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளாக நாய்கள் உள்ளன. நாய்க்கு அடுத்தபடியாக பூனைகள் உள்ளன. மனிதர்கள் செல்லப்பிராணிகள் மீது வைக்கும் அன்பு அபரிவிதமானது.
செல்லப்பிராணிகள் வளர்க்காத மனிதர்கள், செல்லப்பிராணிகளை வளர்க்கும் மனிதர்களிடத்தில் வியந்து போகும் வண்ணம் பார்ப்பது, அவர்கள் செல்லப்பிராணிகள் மீது வைத்திருக்கும் அன்பு. ‘எங்கள் வீட்டு குழந்தைகளுக்கு எங்கள் வீட்டு டாமி மீது உள்ள ஆர்வத்தினால் அவனையும் ரேஷன் கார்டில் சேர்க்க சொல்லி கேட்கிறார்கள்’ என்ற வரியில் தெரியும் செல்லப்பிராணிகள் மீது மனிதன் வைத்துள்ள அன்பு.
இப்படியாக அன்பை மனித மனங்கள் வாரி வழங்கும் செல்லப் பிராணிகளுக்கு, உடல்நிலை சரியில்லை என்றால் அவற்றை வளர்க்கும் மனிதர்கள் நொடிந்து போய் விடுகின்றனர். அவைகள் சரியாகிவிட வேண்டுமென துடிக்கின்றனர். பிராத்திக்கின்றனர். தங்களின் செல்லப்பிராணிகளை ஆபத்துகளில் இருந்து காக்க முயல்கின்றனர். ஆபத்துகளில் பல இருந்தாலும், தற்போது அதிகளவு நாய் மற்றும் பூனைகளை வளர்ப்போர் அச்சப்படுவது, ‘பார்வோ’ எனும் வைரஸ் குறித்துதான்.
சமீப காலமாக நாய் மற்றும் பூனைகளை அதிகம் தாக்கும் ஒரு வைரஸாக பார்வோ உள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் பொதுவாக கிளைமேட் சேஞ்ச் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
1978-ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த ‘பார்வோ’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதல் பூனைகளை காட்டிலும் நாய்களுக்குத்தான் அதிகளவில் ஏற்படுகிறது. நாய்களிடமிருந்து பிற நாய்களுக்கு, காற்றின் வழி இந்த வைரஸ் பரவுகிறது.
தாக்கம்
பார்வோ வைரஸால் தாக்கப்பட்ட பிராணிகள் தொடர் வாந்தி, துர்நாற்றத்துடன் கூடிய ரத்தம் கலந்த பேதி, உணவு ஒவ்வாமை, காய்ச்சல் போன்ற இன்னல்களுக்கு உள்ளாகின்றன.
தொற்றுக்குப்பிறகு செய்ய வேண்டியவை
பார்வோ தொற்றுக்கான அறிகுறிகள் உங்கள் செல்லப் பிராணிகளுக்கு தென்படுமாயின் உடனடியாக கால்நடை மருத்துவரை அனுக வேண்டும். காலை மாலை என நோய் எதிர்ப்பு மருந்து கொடுத்து தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தால் ஐந்து முதல் ஏழு நாள்களில் சரியாகிவிடும். இல்லையென்றால் நாய் இறக்கவும் வாய்ப்புள்ளது.
மேலும், நோய் பாதிக்கபட்ட சம்பந்தப்பட்ட நாயை மற்ற நாய்களிடமிருந்து பிரித்து தனியாக வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட நாயின் மலத்தினை சுத்தமாக அப்புறப்படுத்தி, அந்த இடத்தை சரிவர சுத்தப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட நாய்க்கு உணவு, தண்ணீர் அளிக்க பயன்படுத்திய தட்டுகளை, மற்ற ஆரோக்கியமான நாய்களுக்கு உணவு வைக்க பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
முன்னெச்சரிக்கை
நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தாத நிலையில் பாதிப்புகள் அதிகம் கண்டறியப்பட்டு திடீர் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, நாய் வளர்ப்போர் தடுப்பூசியினை நாய்க்குட்டிகளின் ஆறாம் வாரம் முதல் ஒன்பதாம் வாரம் வரையிலும், ஓராண்டுக்கு பின்பும் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி நாய்களுக்கு போட்டுக்கொள்வது அவசியம்.
ரசிகர்களை ஏமாற்றிய அனிருத், விக்னேஷ் சிவன்!