மத்திய பிரதேசம் மாநிலத்தில், 50 அடி உயர ஆற்றுப் பாலத்திலிருந்து, பேருந்து ஒன்று கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் தங்கோர்கோன் ஆற்றுப்பாலத்தில் இந்த விபத்து, இன்று காலை நடந்திருக்கிறது. இந்தூர் நோக்கி சென்ற தனியார் பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அதிகாலை நேரம் என்பதால், பாலத்தை கடக்கையில் பேருந்து ஓட்டுநர் சற்று கண்ணயர்ந்ததன் காரணமாக விபத்து நேரிட்டதாக பயணிகளில் சிலர் தெரிவித்தனர்.
50 அடிக்கும் மேலான உயரத்தில் அமைந்திருந்த ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பேருந்து ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் தண்ணீர் தடம் ஏதும் அப்போது இல்லை. அத்தனை உயரத்திலிருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில், பேருந்தில் பயணித்த 3 குழந்தைகள் உட்பட 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலியானோர் எண்ணிக்கை அதிகமாகும் என்று அஞ்சப்பட்டது. அதன்படியே அடுத்த சில மணி நேரங்களில் உயிர்ப்பலி எண்ணிக்கை 22 ஆனது.
பேருந்து விபத்துக்கு காரணமான ஓட்டுநர், தலையில் அடிபட்ட காயத்துடன் தப்பியோடியதாக மீட்பு பணியில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர், பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தங்கள் அனுதாபத்தை தெரிவித்ததோடு, இறந்தோரின் வாரிசுகள் மற்றும் காயமடைந்தோருக்கு நிவாரண நிதிகளையும் அறிவித்துள்ளனர்.