நீங்கள் காதலிப்பவரிடம் இருந்து பெற்றுக்கொண்ட முதல் முத்தம் நியாபகம் இருக்கிறதா? எப்படி நீங்களாக கேட்டு வாங்கினீர்களாக..அதுவாக நிகழ்ந்ததா? முதன் முதலில் நீங்கள் கேட்கும்போது உங்கள் காதலி, காதலனின் எண்ண ஓட்டம் என்ன? பலருக்கும் நீங்காமல் மனதில் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு நினைவுதான் முதல் முத்தம்.
காதலில் மெல்ல மெல்ல அடியெடுத்து வைக்கும் ஒருவன் தன் காதலியிடம் ஒரு நாள் இரவில் பேசிக்கொண்டிருக்கும்போது உரையாடல் முடிந்து காதலி கிளம்பும் நேரத்தில் ‘முத்தம் கொடுத்துட்டு போயேன்’ என்கிறான். இங்கு ‘முத்தம் கொடு’ என்பது கட்டளை அல்ல..தந்தால் நல்லா இருக்கும் என்ற ஒரு ஏக்கம்.
முத்தம் கொடு என்ற அவன் சொன்னதை ‘உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே..மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே’ என்று காதல் கானத்தோடு அவன் கேட்டதை நிரூபனம் செய்கிறான். இதற்கு பின், காதலனும் காதலியும் உரையாடுவது போல் ஒரு மெல்லிய கவித்துவமான பாடல் ஆரம்பிக்கிறது.
“உன்னை நினைச்சதும்” எனத் தொடங்கும் இந்த பாடலை பாடலாசிரியர் தாமரை எழுத, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை ஷ்ரேயா கோஷல், சர்தக் கல்யாணி ஆகியோர் பாடியுள்ளனர்.
நீண்ட காலத்திற்கு பிறகு காதலனும் காதலியும் எளிமையான சூழலில் உரையாடுவதுப்போல இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது. முன்பே கூறியது போல ‘உன்னை நினைச்சதும் மனசு மயங்குதே….மனசு மயங்கிதான் முத்தம் கேட்டதே!’ என காதலன் ஆரம்பிக்க, அவனே ‘முத்தம் கேட்டதும் முகம் சிவந்ததே…முகம் சிவந்ததும் இதயம் திறந்ததே’ என்கிறான்.
முகம் சிவந்து இதயம் திறந்த காதலனுக்கு காதலி என்ன கூறப் போகிறாள் என்ற எண்ணம் எழ ‘இதயம் திறந்ததும் ஆசை நுழைந்ததே…ஆசை நுழைந்ததும் தூரம் குறைந்ததே…’ என இருவருக்குமிடையில் இருந்த தூரம் குறைந்துள்ளதை தெரியப்படுத்துகிறாள். கூடவே முத்தத்தின் மீதான ஆசையையும்.
இதுமட்டுமா? ‘தூரம் குறைந்ததும் பேசத் தோணுதே ! பேசப்பேசத்தான் இன்னும் பிடிக்குதே ! பிடிக்கும் என்றதால் நடிக்கத் தோணுதே… நடிக்கும் போதிலே சிரிப்பு வந்ததே!’ என செல்லமாய் காதலில் நடிப்பதை அவள் தெரிவிக்கிறாள்.
காதலனும் பதிலுக்கு ‘சிரிப்பு வந்ததும் நெருக்கமாகுதே, நெருங்கிப் பார்க்கையில் நேசம் புரியுதே’ என எசப்பாட்டு பாடுகிறான். நேசங்களால் கைகள் இணைந்ததே….கை சேர்ந்ததால் கவலை மறந்ததே….தோள் சாயவும் தொலைந்து போகவும் கடைசியாக ஓர் இடம் கிடைத்ததே என காதல் கிடைத்துவிட்டதை உருகி கானமாக்குகிறாள், காதலி.
பாடகர்களின் குரல், ஏ.ஆர்.ரகுமானின் இசை மென்மையாய் காதுகளில் ஊற்ற வரிகள் மனதிற்கு நெருக்கமாகிறது. வரிகளில் முதல் சரணம் வாவ் சொல்ல வைத்தால், இரண்டாம் சரணம் மனதிற்கு நெருக்கமாகிறது.
‘மழை வருகிற மணம் வருவது எனக்கு மட்டுமா? தனிமையில் அதை முகர்கிற சுகம் உனக்கும் கிட்டுமா ?’ என்ற வரிகளும் அதற்கு பதிலாக ‘இருபுறம் மதில் நடுவினில் புயல் எனக்கு மட்டுமா? மழையென வரும் மரகதக்குரல் சுவரில் முட்டுமா ?’ என கேள்வியே பதிலாக வந்ததை என்னவென்று சொல்ல..ஷ்ரேயா கோஷல் குரல் மரகதக்குரல் என கேட்பவரை வருடிவிடுகிறது.
காதலன் தனது காதலை புதையல் என உருவகம் செய்து கொதிக்கும் அனலில் காதல் இருப்பதாகவும், இருந்தாலும் விரைவில் இந்த காதல் கைகூடும் என்றும் கூறி காதலை நிலைநாட்டுகிறான்.
எனது புதையல் மணலிலே…
கொதிக்கும் அனலிலே !
இருந்தும் விரைவில் கைசேரும்
பயண முடிவிலே !