விவசாயம் என்றதும் உணவு எப்படி நினைவுக்கு வருகிறதோ.. அதில் மற்றொன்றும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதுதான் கால்நடைகள். அதிலும் விவசாயத்தில் மாடுகளும் ஆடுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக பசு மாடுகள் தரும் பால் விவசாயிகளுக்கு தினமும் விருந்தாகிறது.
மாடுகள் கன்று ஈனும் முன்பே அதற்கான சில முன்னேற்பாடுகளை செய்வது வழக்கம். குறிப்பாக மாடு இருக்கும் இடத்தை சுத்தம் செய்து வைக்கோல் போன்றவற்றை போட்டு வைக்க வேண்டும். பிறகு, மாடு கன்று ஈன்றதும் அதனை முறையாக பாதுகாக்க வேண்டும். அதற்கான சில வழிமுறைகளை நாம் இங்கே காணலாம்.
- கன்று ஈன்றவுடன் மாட்டின் பின்புறத்தை பொட்டாசியம் பெர்மாங்கனேட் கலந்த நீரைக் கொண்டு கழுவிட வேண்டும்.
- கன்று ஈன்ற மாடுகளுக்கு குடிப்பதற்கு சற்று வெதுவெதுப்பான நீரை கொடுக்க வேண்டும்.
- கன்று ஈன்ற மாடுகளில் இருந்து 2-4 மணி நேரத்திற்குள் நஞ்சுக்கொடி விழுந்துவிடும். அப்படி 8-12 நேரத்திற்கு மேலாகியும் நஞ்சுக்கொடி விழவில்லை என்றால், கால்நடை மருத்துவரை அழைத்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
- அதே சமயம் கன்று ஈன்ற மாடுகளிடம் கன்றினை பால் ஊட்ட விடுவது மற்றும் சீம்பால் கறப்பது போன்றவற்றை செய்வதன் மூலம் நஞ்சுக்கொடி தானாக விழ வழிவகுக்கும்.
- கன்று ஈன்ற மாடுகள் இருக்கும் இடத்தை முறையாக பராமரிக்க வேண்டும் சுகாதாரமாக வைத்திருப்பதன் மூலம் நோய்த்தொற்று பரவும் அபாயத்தை குறைக்கலாம்.
- கன்று ஈன்ற மாடுகளுக்கு அரிசி அல்லது கோதுமை தவிட்டைக் கொடுக்கலாம். பசுந்தீவனம் கொடுப்பது பால் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
- பால் உற்பத்தி திறன் அதிகமாகிக் கொண்ட மாடுகள் கன்று ஈன்றவுடன், பால்சுரம் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அதனை தவிர்க்க முறையாக கால்நடை மருத்துவரை நாட வேண்டும்.
- கன்று ஈன்ற 60 நாட்கள் கழித்து வரும் சினைப்பருவத்தில் மாடுகளுக்கு கருவூட்டல் செய்து அடுத்த 90 நாட்களில் மீண்டும் சினையாக்குவது முறையான சுழற்சியை கொடுக்கும்.
வறட்சி நிலத்திலும் மகசூலை அள்ளித்தரும் முந்திரி விவசாயம்! – படிங்க! செய்யுங்க!