தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம், டவுன் ஹால் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே அக்டோபர் 23 ஆம் தேதி அதிகாலை அங்கிருந்த காரில் சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்தது. மேலும் காரில் இருந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபீன் என்ற இளைஞர் உடல் கருகி பலியானார்.
சென்னையில் இருந்து தடய அறிவியல் துறையினர் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டதில் ஆணிகள், கோலிகுண்டுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணையின் அடிப்படையில், முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 நபர்களை கைது செய்து உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கார் வெடிப்பில் உயிரிழந்த முபீனின் உறவினரான அப்சர் கான் என்ற நபரை காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) விசாரணைக்கு தமிழக நேற்று முதலவர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்த நிலையில், தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று, கோவை கார் வெடிப்பு வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினை உள்துறை அமைச்சகத்தின் தீவிரவாத தடுப்புப்பிரிவு பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: கோவை சம்பவத்தில் முதலில் அண்ணாமலையை விசாரிக்க வேண்டும்; அமைச்சர் செந்தில் பாலாஜி பாய்ச்சல்