இந்தியா மற்றும் நெதர்லாந்துக்கு இடையே நடைபெற்ற ‘சூப்பர்-12’ சுற்றில் 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில், பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்தது. இதைத்தொடர்ந்து, நெதர்லாந்துடன் இந்திய அணி இன்று மோதியது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதைத்தொடர்ந்து, ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் களமிறங்க, 9 ரன்களுக்கு எல்பிடபிள்யூ முறையில் கே.எல்.ராகுல் பெவிலியன் திரும்பினார். இந்த விக்கெட்டின் போது, ரோஹித் சர்மாவிடம் ‘டிஆர்எஸ்’ முறையீடுக்கு செல்லலாமா எனக் கேட்க, அவர் வேண்டாம் என்று சொல்லவே பெவிலியன் திரும்பினார்.
ஆனால், டிஆர்எஸ் எடுத்திருந்தால் கே.எல்.ராகுல் விக்கெட் பறிபோயிருக்காது. இதையடுத்து, 53 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பிறகு, கோலியும்-சூர்யகுமார் யாதவும் ஒன்று சேர்ந்து அற்புதமாக விளையாடினர்.
அதன் விளைவாக, இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. கோலி 62 ரன்னுடனும், சூர்யகுமார் யாதவ் 51 ரன்னுடனும் ஆட்டக்களத்தில் இருந்தனர். இதன்பிறகு, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து களமிறங்கியது. ஆனால், இந்திய அணியின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்காமல், நெதர்லாந்து தனது விக்கெட்டுகளை இழந்தது.
மொத்தத்தில், 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து நெதர்லாந்து அணி 123 ரன்கள் மட்டுமே எடுத்து, 56 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது. இதன்மூலம், குரூப் 2 பிரிவில் முதலிடம் வகிக்கிறது. இதற்கடுத்து, ஞாயிறன்று பெர்த்தில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் மோதுகிறது.
இதையும் படிங்க: இந்திய அரசு கண்டிக்காதது தான் சிங்கள அரசின் அத்துமீறலுக்கு காரணம்; பாமக தலைவர் கண்டனம்