காடுகள் அழிப்பு 30 சதவீதம் குறைந்துள்ளது என ஐநாவின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (எப்ஏஓ) தெரிவித்திருக்கிறது.
காடுகள் அழிப்பு என்பது பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. மக்களது அன்றாடத் தேவைகளுக்காகவும், தொழிற்சாலைகளுக்குத் தேவையான எரிசக்தியினை உற்பத்தி செய்வதற்காகவும், விவசாய நிலங்களை அதிகரிப்பதற்காகவும், கனிமங்களை எடுப்பதற்காகவும் காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன.
ஒரு பக்கம் காடுகள் அழிந்து வரும் நிலையில், வெட்டப்பட்ட மரங்களை எரிப்பதால் உண்டாகும் கரியமில வாயுக்களால் உலகத்தின் வெப்பநிலையானது கூடிக்கொண்டே செல்கிறது.
இது மட்டுமின்றி, காடுகள் கரியமில வாயுக்களை குறைப்பதில் மிக பங்காற்றுகின்றன. ஒரு பக்கம் கரியமில வாயுக்கள் அதிகரிப்பு மறுபக்கம் காடுகள் அழிப்பு என்பது சரி சமமாக நடந்து கொண்டிருப்பது உலகின் வெப்பநிலையினை வெகுவாக பாதித்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வருடத்தில் அமேசான் காடுகள் உட்பட உலகின் பல பகுதிகளிலுள்ள காடுகள் இதுவரை இல்லாத அளவிற்கு காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டன. இந்த விபத்துகளுக்கு மிக முக்கிய காரணமாகப் பார்க்கப்பட்டது காலநிலை மாற்றமாகும்.
சென்ற மாதத்தில் பிரேசில் நாடானது தங்களது உணவு உற்பத்தியினை அதிகரிப்பதற்காக அமேசான் காடுகளின் பெரும்பாலான பகுதிகளை அழித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உலகில் நிலவும் இந்த சமநிலையற்ற தன்மையினை மாற்றுவதற்கு பல அமைப்புகள் முயன்று கொண்டிருக்கின்றன.
வளர்ந்த, வளர்ந்து வரும் நாடுகள் பலவும் தங்களது நாட்டில் உற்பத்தியாகும் கரியமில வாயுக்களின் அளவினை எதிர் வரும் ஆண்டுகளில் குறைப்பதற்கும், காடுகளின் பரப்பளவினை அதிகரிக்கவும் உறுதிமொழி ஏற்றுள்ளன.
இந்நிலையில், இந்த நூற்றாண்டுடன் ஒப்பிடுகையில் தற்போது காடுகள் அழிப்பு 30 சதவீதம் குறைந்துள்ளதாக ஐநாவினை சேர்ந்த எப்ஏஓ (FAO) என்ற அமைப்பு கூறியுள்ளது.
2000-10 ஆண்டுகளில் வருடத்திற்கு 11 மில்லியன் ஹெக்டர் அளவு இருந்த காடுகள் அழிப்பு 2020-18 ஆண்டுகளில் வருடத்திற்கு 7.8 மில்லியன் ஹெக்டராக குறைந்துள்ளது. கிட்டத்தட்ட 29 சதவீதம் குறைந்துள்ளது.
கடந்த பத்து ஆண்டுகளில் சவுத் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் அதிக அளவு காடுகள் அழிப்பு நடந்துள்ளது. இருப்பினும் உலகிலுள்ள மழைக்காடுகள் இன்னும் பெரிய இக்கட்டிலிருந்து வெளிவரவில்லை என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் ஒட்டுமொத்த காடுகள் அழிப்பில் 90 சதவீதம் மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 157 மில்லியன் ஹெக்டர் அளவுள்ள மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
‘இந்த கணக்கெடுப்பு மிக முக்கியமானது; வெறும் எண்களுக்காக மட்டுமல்லாது உலகில் உள்ள காடுகளுக்கு என்ன நடக்கிறது என்பதினை தெரிந்து கொள்ள இது உதவுகிறது. மேலும், நிலைமையானது எவ்வளவு சிக்கலாக உள்ளது என்று தெரிந்துகொள்ளவும் இந்த கணக்கெடுப்பு உதவுகிறது’ என்று எப்ஏஓ அமைப்பின் துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
‘வரைமுறையில்லா விவசாய நடவடிக்கைகள், பிற தேவைகளுக்காக அழிக்கப்படும் காடுகள் ஒரு இக்கட்டான நிலைமையினை உண்டாக்குகின்றன. முக்கியமாக ஏழ்மை நிலையிலுள்ள நாடுகள் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய்க்காக வளர்க்கப்படும் மரங்களுக்காக மட்டுமே 50 சதவீத காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. கால்நடைகள் வளர்ப்பிக்காக 38.5 சதவீதம் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன.
புதிய காடுகளின் வளர்ச்சியானது சிறிதளவு உயர்ந்துள்ளது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது. 2000-10 ஆண்டுகளில் வருடத்திற்கு 4.2 மில்லியன் ஹெக்டராக இருந்த காடுகள் வளர்ப்பு, 2010-2018ம் ஆண்டுகளில் வருடத்திற்கு 4.7மில்லியன் ஹெக்டராக உயர்ந்துள்ளது என்று அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இன்னும் மூன்று மாதத்தில் கோவை முழுக்க முழுக்க “ஸ்மார்ட் சிட்டி’தான்!