நமது உடல் கற்பனைக்கு எட்டாத அதிசயங்கள் நிறைந்தது. நம்மை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் உடல் ஒவ்வொரு வினாடியும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.
ஆனால் உடல் என்ற இந்த உயிர் இயந்திரம் செய்யும் அற்புதங்களை நாம் நினைப்பதும் இல்லை. ரசிப்பதும் இல்லை. இருந்தாலும் அறிவியல்பூர்வமாக அந்த அதிசய உண்மைகளை நாம் உணரும்போது ஒரு கணமேனும் சிலிர்ப்பும், மலைப்பும் நமக்கு ஏற்படவே செய்யும்.
நம்முடைய தோல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 6 லட்சம் நுண்ணிய துணுக்குகளை இழந்துவிடுகிறது. நம்மைச் சுற்றியுள்ள தூசிக்கு இதுவும் ஒரு காரணம். ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 700 கிராமை இப்படி மனிதர்கள் இழக்கிறார்கள்.
நம்முடைய மூளைக்கும் 50,000 வேறுபட்ட மணங்களை ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய திறன் உள்ளது என்பது தெரியுமா?
சராசரியாக ஒவ்வொரு மனிதரும் தங்கள் ஆயுட்காலத்தில் 30 ஆயிரம் கிலோ எடை கொண்ட உணவினை உட்கொள்கிறார்கள். நம்முடைய சிறுகுடல் சராசரி மனிதனின் உயரத்தைப்போல நான்கு மடங்கு நீளமாக இருக்கும். 18 முதல் 23 அடி நீளம் கொண்ட அது, நம்முடைய வயிற்றுக்குள் பாம்பு போலச் சுருங்கிக் கிடக்கிறது.
நம்முடைய ஒவ்வொரு சதுர அங்குலத் தோலிலும் 3 கோடி பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. நல்லவேளையாக அவற்றில் பெரும்பாலானவை தீங்கு செய்யாதவை. நம் தலையில் சுமார் ஒரு லட்சம் மயிர்க்கால்கள் உள்ளன. தினசரி சுமார் 100 மயிரிழைகள் உதிர்கின்றன. சாதாரணமாய் மனித உடலில் தினசரி சுமார் 800 மி.லிட்டர் வியர்வை சுரக்கிறது.
உடலில் மிகக் கடுமையாக உழைக்கும் உறுப்பு இதயம்தான். ஒரு நாளில் ரத்தக் குழாய்களின் வழியாகப் பம்ப் செய்யும் ரத்தத்தின் மொத்த அளவு கிட்டத்தட்ட 7,500 லிட்டர்.
இதயம் ஒரு வருடம் 43 லட்சம் தடவை துடிக்கிறது. உடலுக்குள் ரத்தம் தினமும் 16 கோடியே 80 லட்சம் மைல் தூர அளவுக்கு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது.
நமது இதயம் உடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்டாலும் தன் துடிப்பை உடனே நிறுத்தாது. ஏனெனில் இதயத்தில் உள்ள மின்சார உந்துவிசை சிறிது நேரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும்.
நமது விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை. நமது உடலில் உள்ள நரம்புகளை ஒன்றாக இணைத்து நீட்டி வைத்தால், அது கிட்டத்தட்ட 1 லட்சம் கிலோ மீட்டர் நீளம் இருக்கும்.
நம் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுகள் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் பெற்றுக்கொண்டே இருக்கும். ஒரு வளர்ந்த மனித உடலில் 206 எலும்புகள் உள்ளன. குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் 300 எலும்புகள் இருக்கும். நாளாவட்டத்தில் குழந்தை வளரும்போது சில எலும்புகள் ஒன்றோடொன்று இணைந்து விடும்.
மனிதன் தன் வாழ்நாளில்…
சாதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்நாளில் இரண்டு நீச்சல் குளங்களை நிரப்பும் அளவுக்கு சுமார் 23 ஆயிரம் லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறான். நம் உடலில் இரும்பு சத்து இருப்பதை அறிவோம். இந்த இரும்பு சுமார் 7.5 செ.மீ. நீளமுள்ள சாதாரண அளவு ஆணியை உருவாக்கும் அளவுக்கு உள்ளது.
நம் உடலின் எல்லா செல்களில் உள்ள டி.என்.ஏ. (DNA) வைப் பிரித்து நீட்டி இழுத்தால், அதன் நீளம் 10 பில்லியன் மைல்கள் இருக்கும். இது நாம் பூமியிலிருந்து புளூட்டோ கிரகம் சென்று திரும்பி வரும் அளவுக்கு சமம். நமது விரல்கள் 13 நானோ மீட்டர் அளவு குறைந்த பொருளையும் உணரும் தன்மை பெற்றவை.
ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் கால்வாசி பகுதி தலைதான் இருக்கும். அதேநேரம் வளர்ந்த பிறகு நமது உடலில் எட்டில் ஒரு பாகம்தான் தலை இருக்கிறது (ஒரு சாண்). அதனால், குழந்தைக்குத் தலை பெரிதாக இருப்பது போலத் தெரியலாம்.
பல வாரங்களுக்குச் சாப்பிடாமல்கூட உயிர் வாழ்ந்துவிடலாம். ஆனால், தொடர்ச்சியாக 11 நாட்களுக்கு மேல் தூங்காமல் வாழ முடியாது. மனித உடலையும், அதில் உள்ள உறுப்பு களின் செயல்களையும் எண்ணிப்பார்க்கையில் ஒரு விந்தையே. இவ்வளவு அதிசயங்கள் நிறைந்த இந்த உடல் இறைவனால் நமக்கு அளிக்கப்பட்ட பரிசே. அதை நலத்துடன் பாதுகாப்போம்.
அசத்திய குஜராத் டைட்டன்ஸ்; ஆரவாரமில்லாமல் நடந்த இறுதிப்போட்டி!