உலகெங்கிலும் பல நாடுகளில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் அதிக குளிர் நிலவுகிறது. குறிப்பாக டிசம்பர் மாதத்தில் பல நாடுகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. நமது நாட்டில் கடும் குளிர் நிலவுகிறது. இந்தக் குளிரினால், உடல் அளவில் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல பிரச்சனைகள் உண்டாகின்றன.
பொதுவாக, சளி, காய்ச்சல், வறண்ட சருமம், தொண்டை வலி, தூக்கமின்மை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இவற்றில் இருந்து நம்மை எப்படி பாதுகாத்து கொள்வது குறித்தான 10 முக்கிய பிரச்சனைகளும் அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் இந்தத் தொகுப்பில் காணலாம்.
உணவும் ஆரோக்கியமும்:
குளிர்காலத்தில் நமக்கு அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தி தேவை. காரணம் இந்தக் காலத்தில் நோய்த்தொற்று அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளது. அதனால் நாம் சத்தான உணவு வகைகளை தேர்வு செய்து உண்ண வேண்டும். குறிப்பாக முழு தானியங்கள், பருப்பு வகைகள், இறைச்சி போன்றவற்றை உண்ண வேண்டும். மேலும் குளிர் காலத்தில் கிடைக்கும் பழங்களையும் காய்கறிகளையும் எடுத்துக்கொள்வது அவசியம். இது உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடும்.
உடற்பயிற்சி:
குளிர் காலத்தில் மிக முக்கியமான ஒன்று சுறுசுறுப்பாக இருப்பது அவசியம். சிறு நடற்பயிற்சியினை மேற்கொள்வது நல்லது. யோகா அல்லது ஏதேனும் அசைவுடைய வேலைகளில் ஈடுபடுவது உங்களை கதகதப்பாக வைத்திருக்க உதவும். மேலும் இப்படி செய்வது, உங்களின் ஆற்றலை அதிகரிப்பதோடு இந்தக் காலநிலை காரணமாக ஏற்படும் சளி, இருமல் போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு எதிராக செயல்பட உதவும்.
சரும பிரச்சனைகள்:
குளிர்கால பிரச்சனைகளில் பெரும்பாலானோர் அதிகம் எதிர்கொள்வது தான் இந்த சரும பிரச்சனை. குளிரில் சருமம் வறட்சி ஏற்படும். அதேபோல் சரும அரிப்பு, வறண்ட உதடுகள், பாத வெடிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதில் இருந்து நம்மை காக்க அதிக தண்ணீரை குடிக்க வேண்டும். அதே சமயம், ஈரப்பதம் மிக்க க்ரீம்களை பயன்படுத்தலாம்.
தண்ணீர் அவசியம்:
குளிர்காலத்தில் பொதுவாகவே சிறுநீர் அடிக்கடி வரும் என்பதால் பலரும் தண்ணீரை குடிப்பதில்லை. மேலும் தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இதனை தவிர்த்து தண்ணீரை அதிகமாக குடிக்க வேண்டும். இது உங்களின் உடலை சமநிலையையாக வைத்துக்கொள்ள உதவும்.
தூக்கம்:
குளிர் காலத்தில் அதிகம் தூக்கம் வரும் என்பதால், தூங்கி கொண்டே இருக்கவும் கூடாது. மேலும் சரியான தூக்கமும் அவசியம். இது உங்களின் ஆற்றலை அதிகரிக்க உதவும்.
சுகாதாரம்:
குளிர்காலத்தில் நோய்த் தொற்றுப் பரவும் அபாயம் இருக்கும் என்பதால், முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
குளிர் காலத்தில் உங்களின் உடல் ஆரோக்கியத்தை அவ்வப்போது சரி பார்த்து கொள்ள வேண்டும். மேலும் சிறிய உடல் பிரச்சனை என்றாலும் அதனை எளிதாக எடுத்துக் கொள்ள கூடாது.
புகைபிடித்தல்:
புகைபிடிப்பதை குளிர் காலத்தில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இது சுவாச பிரச்சனைகள் உண்டாக வழிவகுக்கும் என்பதால் புகைப்பிடித்தலை தவிர்க்க வேண்டும்.
வைட்டமின் டி:
குளிர் காலத்தில் வெயில் உடம்பில் அதிகம்படாமல் இருப்பது வைட்டமின் டி குறைப்பாட்டை ஏற்படுத்தும். அதனால், வைட்டமின் டி மிக்க உணவு வகைகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
எப்படிப்பட்ட உடையை அணிய வேண்டும்?
கம்பளி உடையை அணிவது உங்களை வெதுவெதுப்பாக வைத்திருக்க உதவும். மேலும் இப்படிபட்ட உடையை அணிவது சளி, காய்ச்சல், இருமல் போன்ற பிரச்சனைகளில் இருந்து காத்துக்கொள்ள உதவும்.
என்னதான் நாம் குளிர் காலத்தில் இவ்வளவு பிரச்சனைகளை சந்தித்தாலும், இந்தக் குளிரில் நாம் சுறுசுறுப்புடன் இருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை நாம் பெற முடியும்.