Monday, March 18, 2024
மேலும்
    Homeஅறிவியல்மனிதர்களிடத்தில் உயரம் ஏன் அதிகரிக்கிறது என்று தெரியுமா?

    மனிதர்களிடத்தில் உயரம் ஏன் அதிகரிக்கிறது என்று தெரியுமா?

    மனிதர்கள் இதற்கு முந்தைய காலங்களில் இல்லாத அளவில் உயரமாக வளர்வதும் சீக்கிரமாக பருவமடைவதும் ஏன் என்பதை மூளையில் உள்ள சென்சாரின் மூலம் விளக்க முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

    இது எப்படி நிகழ்ந்தது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்த ஆய்வு, தசைகள் வளரவும், தாமதமான வளர்ச்சிக்கான சிகிச்சையாகவும் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.

    பொதுவாக சத்தாண உணவை தகுந்த நேரத்தில் உண்பவர்கள் சீக்கிரம் உயரமாக வளர்வார்கள் என்பது விஞ்ஞானிகளுக்கு தெரியும்.

    உணவுகளிலிருந்து வரும் சமிக்ஞைகள் மூளையில் ஹைபோதாலமஸ் என்று அழைக்கப்படும் பகுதிக்கு சென்று உடலின் போஷாக்கான ஆரோக்கியம் குறித்து தெரிவித்து வளர்ச்சியை தூண்டுகிறது.

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டு, லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம், பிரிஸ்டல் பல்கலைக்கழகம், மிஷிகன் பல்கலைக்கழகம் மற்றும் வாண்டர்பில்ட் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த செயல்முறைக்கு பின்னால் உள்ள மூளையின் ரெசிப்டர் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

    அதனை MC3R என்று அழைக்கிறார்கள். அதுதான் உணவு, பாலியல் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான முக்கிய இணைப்பாக உள்ளது.

    “நமக்கு நிறைய உணவு கிடைத்துள்ளது எனவே வேகமாக வளர வேண்டும் வேகமாக பருவமடைய வேண்டும் அதேபோன்று சீக்கிரம் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று உடலுக்கு சொல்கிறது.” என்கிறார் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த சர் ஸ்டீஃபன் ஓ ரஹிலி.

    “இது வெறும் மாயஜாலம் மட்டுமல்ல – இது எப்படி நடைபெறுகிறது என்ற முழு வரைப்படம் எங்களிடம் உள்ளது.”

    மனிதர்களிடம் மூளை ரெசிப்டர் சரியாக வேலை செய்யவில்லை என்றால் அவர்கள் உயரம் குறைவாக வளருகிறார்கள். மேலும் தாமதமாக பருவமடைகிறார்கள்.

    இதை உறுதி செய்ய பிரிட்டனின் பயோவங்கியிடம் 5 லட்சம் தன்னார்வலர்களால் வழங்கப்பட்ட மரபணு வகையை ஆய்வுக் குழு ஆராய்ந்தது. இது ஒரு மரபணு மற்றும் சுகாதாரம் சார்ந்த மிகப்பெரிய தரவு சேகரிப்பாகும்.

    மூளையின் ரெசிப்டார்களை இடைமறிக்கும் மரபணு பிறழ்வை கொண்ட குழந்தைகள் பிற குழந்தைகளை காட்டிலும் எடை குறைந்தும், உயரம் குறைவாகவும் காணப்படுகின்றனர்.

    MC3R மரபணுவிற்கான இரு மரபணுக்களிலும் பிறழ்வு ஏற்பட்ட ஒருவரை ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர். இது உடல் வளர்ச்சியை அதிகம் குறைத்துவிடும். அதேபோன்று அந்த நபர் உயரம் குறைந்தும் 20 வயதுக்கு மேற்பட்டே பருவமடைந்தும் காணப்படுவார்.

    பயன்கள்:

    இந்த ஆய்வுகள் தொடர் நோயால் வலுவற்று, தசைகள் வலுவிழந்து போனவர்களுக்கு உதவும்.

    அதேபோன்று “எதிர்காலத்தில் MC3R-ஐ தூண்டிவிடும் மருந்து தசைகளுக்கு கலோரிகளை வழங்குமா என்று ஆராய வேண்டும். இதன்மூலம் நோயாளிகளின் உடல் வலுப்பெறும்” என பேராசிரியர் ஸ்டீஃபன் தெரிவிக்கிறார்.

    இந்த ஆய்வை மனிதர்களிடத்தில் மட்டுமல்ல எலிகளிடத்திலும் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.

    அதேபோன்று பசியை கட்டுப்படுத்தும் மூளை ரெசிப்டாரையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது MC4R. அதில் குறைபாடு உடையவர்கள் பொதுவாக அதிக எடையுடன் காணப்படுவர்.

    மனிதனின் உடல் வளர்ச்சிக்கு எல்லையுண்டா?

    உயரத்திற்கு ஒரு வரம்பு உள்ளது. அது மனிதர்கள் தங்களின் மரபணு திறனை அடைந்தவுடன் நிகழ்கிறது. உடல்நலமும், உணவும் இதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    ஏழை குடும்பங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு போதிய உணவும் கலோரிகளும் கிடைத்தால் அவர்கள், தங்களின் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி போன்றவர்களிடமிருந்து பெற்ற ஜீனுக்கு ஏற்ப வளர்ச்சியடைவர்

    பொதுவாக உயரமானவர்கள் அதிக நாட்கள் உயிர் வாழ்வர். அதேபோன்று அவர்களுக்கு இதய நோய்கள் வரும் வாய்ப்பும் குறைவு. இருப்பினும் மனிதர்கள் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்ல முடியாது. பல நாடுகளில் கடந்த தசாப்தத்தில்தான் மனிதர்களின் சராசரி உயரம் அதிகரித்துள்ளது.

    அதேபோன்று தென் கொரிய பெண்களும் ஈரானிய ஆண்களும் கடந்த நூற்றாண்டில் அதிக உயரத்தை அடைந்துள்ளனர்.

    நெதர்லாந்து ஆண்கள்தான் உலகின் உயரமான ஆண்கள். அவர்களின் உயரம் 71.8 இன்ச். குவாட்டமாலாவின் பெண்கள்தான் உலகளவில் உயரம் குறைந்த பெண்கள். அவர்களின் உயரம் 55.1 இன்ச் ஆகும்.

    இந்த வாரம் எப்படியிருக்க போகுது மக்களே…. துலாம் முதல் மீனம் வரையிலான ராசி பலன்கள் இதோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....