கேதார கௌரி விரதம்:
கேதாரம் என்ற சொல்லுக்கு ‘இமயமலைப் பகுதியைச் சார்ந்த வயல் பகுதி’ என்பது பொருளாகும். கௌரி எனப் போற்றப்படும் பார்வதி அம்மை கேதாரப் பகுதியில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நினைத்து மேற்கொண்ட விரதமாயின் இது “கேதார கௌரி விரதம்” என அழைக்கப்படுகிறது.
இவ்விரத முறையினைப் பின்பற்றி உமாதேவியார் சிவனுடன் ஐக்கியமானார் என்பதே இதன் சிறப்பாகும். இவ்விரதம் கௌரி நோன்பு, அம்மன் விரதம், கௌரி காப்பு நோன்பு, நோன்பு என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.
இவ்விரதத்தை கடைபிடிக்கும் எல்லோருக்கும் சகல நன்மைகளுடன் ஐஸ்வர்யமும் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
கேதார கௌரி விரத மகிமை:
இவ்விரதத்தைப் பின்பற்றியே மகாவிஷ்ணு வைகுண்டத்தைப் பெற்றார் எனவும், பிரம்ம தேவன் படைப்புத் தொழிலை பெற்றார் எனவும், தேவேந்திரன் பொன்னுலகை ஆண்டு வெள்ளை யானையை பெற்றார் எனவும் கருதப்படுகிறது.
திருமணமான பெண்கள் கணவரின் தீர்க்க ஆயுள் வேண்டியும், தம்பதி ஒற்றுமைக்காகவும் குடும்ப சுபிட்சம் வேண்டியும் இவ்விரத முறையினை மேற்கொள்கின்றனர். கன்னிப்பெண்கள் நல்ல கணவர், நிறைந்த திருமண வாழ்க்கை, நற்புத்திரர்கள் வேண்டி இவ்விரத முறையினை மேற்கொள்கின்றனர்.
இவ்விரதத்தினால் கணவன் மனைவி ஒற்றுமை, நல்ல வளமான திருமண வாழ்க்கை நற்புத்திரர்கள், நல்ல எண்ணங்கள் ஈடேறுதல் ஆகியவை ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. நாமும் இவ்விரத முறையை மேற்கொண்டு குடும்ப ஒற்றுமையுடன் இறையருளால் இம்மை மறுமைகளில் சுக வாழ்வு வாழ்வார்கள் என்பது நம்பிக்கை.
விரதம் கடைப்பிடிக்கும் முறை :
இவ்விரத முறையில் வழிபாடானது வீடுகளிலோ அல்லது கோவில்களிலோ மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 21 நாட்கள் இவ்விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. முதலில் கலசத்தில் தேங்காய் வைத்து கும்பம் தயார் செய்யப்படுகிறது. பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கப்படுகிறார்.
வழிபாட்டில் பூக்கள், அதிரசம், அப்பம், சர்க்கரைப்பொங்கல், புளிசாதம், நோன்புக் கயிறு ஆகியவை படைக்கப்படுகின்றன. நோன்புக் கயிறானது 21 இழைகளால் பின்னப்பட்டுள்ளது. முதலில் விநாயகருக்கு தீப தூபம் காட்டி வணங்கப்படுகிறது. பின் கும்பத்தில் அம்மையப்பரை ஆகவாகனம் செய்து தீப தூபம் காட்டி சிவன் மற்றும் சக்திக்கான பாடல்கள் பாடப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது.
வழிபாட்டின் ஒவ்வொரு நாளும் நோன்பு கயிற்றில் முடிச்சு ஒன்று போடப்படுகிறது. விரத நாட்களில் பகலில் உணவு உண்ணாமல் இரவில் படையலிடப்பட்ட அதிரசம் மட்டும் உட்கொள்ளப்படுகிறது. இவ்வாறாக 21 நாட்கள் விரதம் பின்பற்றபடுகிறது. 21-ம் நாளான அமாவாசை அன்று முழுவதும் உணவு உண்ணாமல் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது.
அன்றைய தினம் பிரதோச வேளைக்கு பின் நோன்புக் கயிறு கட்டப்படுகிறது. நோன்புக் கயிறு முழங்கைக்கும் தோளுக்கும் இடைப்பட்டப்பகுதியில் அணியப்படுகிறது. ஆண்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் நோன்புக் கயிற்றினை அணிகின்றனர். முந்தைய வருடம் கட்டப்பட்ட நோன்புக் கயிறு பூஜையின் மறுநாள் நீர்நிலைகளில் விடப்படுகிறது.
தற்போது இவ்விரதம் 9 அல்லது 7 அல்லது 5 அல்லது 3 நாட்கள் அல்லது அமாவாசை அன்று மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முடிந்தது ஐபிஎல் லீக் போட்டிகள்; ஆறுதல் வெற்றி பெற்ற பஞ்சாப்..