தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வருகிற ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடைகிறது 6 இடங்கள் காலியாக உள்ளன.
திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, கே.ஆர்.எஸ் ராஜேஷ்குமார், அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், பாலசுப்ரமணியன், விஜயகுமார் ஆகியோரது பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் நிறைவடைகிறது. அத்துடன் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்களில் வாக்கு தேவை என்பதால் 57 இடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதையொட்டி, தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படப் போவது யார் என்பது குறித்து பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது. தி.மு.கவில் இருவர் பெயர் கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதால் மற்ற இரு இடங்களுக்கான போட்டி மும்முரமாக நடந்து வருகிறது.
மாநிலங்களவை என்றால் என்ன?
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி நாடான இந்தியாவின் நாடாளுமன்றம் மூன்று அங்கங்களைக் கொண்டது. அவை குடியரசுத் தலைவர், மக்களவை, மாநிலங்களவை ஆகியன. மக்களின் பிரதிநிதிகள் நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களவைக்கு வருவர். அதே போல, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரதிநிதிகள் உண்டு. அவர்கள் மாநிலங்களவைக்கு வருவர். இது நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் மேலவையாகப் பார்க்கப்படுகிறது.
இந்திய மாநிலங்களவையில் எத்தனை உறுப்பினர்கள்?
இந்திய அரசியலமைப்பின்படி, மாநிலங்களவைக்கு 250 உறுப்பினர்களுக்கு மேல் இருக்ககூடாது. இதில் 238 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் இருக்கும் 12 பேர் குடியரசுத்தலைவரால் நியமனம் செய்யப்படும் நியமன உறுப்பினர்கள் ஆவர்.
அதன்படி, ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கி 31ம் தேதி முடிவடைகிறது. மாநிலங்களவை தேர்தல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் நடைபெறும். ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் , 34 சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களிக்க வேண்டும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில் திமுகவுக்கு 4 , எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும். திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் ஒப்பந்தத்தின் படி ஒரு இடத்தை வழங்கியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களுக்கான வேட்பாளர்களை சமீபத்தில் அறிவித்தது.
அதன்படி தஞ்சை கல்யாணசுந்தரம், கிரிராஜன், கே.ஆர்.எஸ் ராஜேஷ்குமார் ஆகியோர் மாநிலங்களவை வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் தனது ஓரிடத்தில் வேட்பாளரையும், அதிமுக இரண்டு இடங்களுக்கான வேட்பாளரையும் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் தேர்தல் நடத்தும் அலுவலராக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு பணியாற்ற உள்ளார்.
இந்திய துணைக் குடியரசுத் தலைவர் மாநிலங்களவையின் தலைவராக விளங்குவார். இத்துடன் உறுப்பினர்களுக்குள் இருந்து ஒருவரை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.