தமிழ் மாதங்களில் மிக முக்கிய மற்றும் சிறப்பு வாய்ந்த மாதமாக பார்க்கப்படுவது மார்கழி மாதம். இந்த மாதம் ‘தனுர் மாதம்’ என்றும் அழைக்கப்படுகிறது.
இந்து புராணத்தின் படி, 12 மாதங்கள் இரண்டு அயன்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்று உத்தராயணம்; மற்றொன்று தக்ஷிணாயனம். தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயணம் என்றும் ஆடி முதல் மார்கழி மாதம் வரை தக்ஷிணாயனம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.
மனிதர்களைப் போன்றே தேவர்களுக்கும் கால அளவுகள் உள்ளன. அதன்படி, மனிதர்களின் ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஓர் நாள் ஆகும். அப்படி பார்க்கையில், ஒரு பகல் ஒரு இரவு அடங்கும். தை முதல் ஆனி மாதம் வரையிலான மாதங்கள் தேவர்களுக்கு பகலாகவும் தை முதல் ஆனி மாதம் வரையிலான மாதங்கள் இரவாகவும் ஆகவும் கணக்கிடப்படுகிறது. இதன்படி பார்க்கும்பொழுது, தேவர்களின் அதிகாலை பொழுதாக வருவது மார்கழி மாதம்.
இந்த மாதத்தில் விடியற்காலை பொழுதில் எழுந்து இறைவனை வழிபாடு செய்வது முதற்கடமையாக பார்க்கப்படுகிறது. ஒரு வருடம் முழுவதும் இறைவனை வணங்காமல் இருந்தாலும், இந்த ஓர் மாதத்தில் வணங்குவதன் மூலம் ஓர் வருடம் வழிபட்டதற்கான பலன்களைக் கண்டிடலாம் என்பது ஐதீகம்.
இதையே தான் பகவத்கீதையில் கிருஷ்ணர், மாதத்தில் தான் மார்கழியாக இருப்பதாக கூறியுள்ளார். மார்கழி-மாரி என்பது மழை. கழி என்பது கழிந்த அதவாது மழை முடிந்து பனி படரும் காலம் என்பது பொருள்படும். இதனை ‘பீடை’ மாதம் என்று அழைப்பது வழக்கமாக மாறிவிட்டது. உண்மையில் ‘பீடு’ என்பதில் இருந்தே பீடை என்றானது. ‘பீடு’ என்றால் பெருமை என்று பொருள். பெருமைமிகு மாதமாக இருப்பதால் தான் மார்கழியை பீடு மாதம் என்கிறார்கள்.
அப்படி பெருமைமிகு மாதத்தில் ஏன் சுப நிகழ்ச்சிகள் செய்ய கூடாது என அனைவருக்கும் சந்தேகம் இருக்கும். இந்த மாதத்தில் முழுவதும் இறைவழிபாட்டிற்கு முக்கியத்துவம் தருவதால் மட்டுமே குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் செய்யப்படுவதில்லை. அதிலும் சில முக்கிய சுப நிகழ்ச்சிகள் மட்டுமே.
அப்படி மார்கழியில் சிறப்பான வழிபாடுகள் என்னவென்று பார்த்தால், நமக்கு மார்கழி என்றதும் நினைவில் வருபவர் கிருஷ்ணர் தான். ஆம், இது கிருஷ்ணருக்கு உரிய சிறப்பு வாய்ந்த மாதமாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது.
இந்த மாதத்தில் தான், மகாபாரதப் போர் நடைபெற்றதாகவும், ஆண்டாள் திருமாலை திருமணம் செய்து கொண்டதும் இந்த மாதத்தில் தான் என்றும், புராணங்கள் தெரிவிக்கின்றன. மேலும், திருப்பாற்கடலை கடையும் போது உண்டான விஷத்தை சிவன் உண்டு உலகை காப்பாற்றியதும், கோவர்தனக்கிரி மலையை கிருஷ்ணர் தனது சுண்டு விரலால் பிடித்து மக்களை காப்பாற்றிய மாதமும் இது தான் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
அதேபோல் மார்கழி மாதம் கிருஷ்ணருக்கு மட்டுமல்ல சிவனுக்கும் உகந்த மாதமாக பார்க்கப்படுகிறது. காரணம் மார்கழி மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் பிறந்த மார்க்கண்டேயர் மரணத்தை வென்றதாக மார்க்கண்டேய புராணம் குறிப்பிட்டுள்ளது. இந்த மாதத்தில் கோயில்களில் திருப்பாவையும் திருவெம்பாவையும் பாடச் செய்கிறார்கள்.
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்” என ஆண்டாள் நாச்சியார் பாடியுள்ளார். அதேபோல் திருவெம்பாவையில் மாணிக்கவாசக நாயனார், “போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய்” என குறிப்பிட்டுள்ளார்.
மார்கழியில் அதிகாலை நீராடலும் இறைவழிபாடும் அத்தனை சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது. இதற்கு அறிவியல் சான்றுகளும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதில், அதிகாலையில் எழுவதால் மாசற்ற தூய்மையான இயற்கை காற்றை சுவாசிக்க முடியும் என்கிறார்கள். மேலும் இதனால் மனிதர்களுக்கு வரும் நோய்கள் குணமாகும் என்றும் கூறப்படுகிறது.
குறிப்பாக மார்கழி மாதத்தில் ஓசோன் படலம் பூமிக்கு மிக அருகில் வருவதால் அதிகாலையில் விழிப்பது புத்துணர்ச்சியை கொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதத்தில் பல கோயில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம், இதில் கலந்துகொள்ளும் பக்தர்கள் விரதமிருந்து தங்களின் வேண்டுதல்களை வைப்பர். முக்கியமாக இந்த மாதத்தில் திருவாதிரை வைகுண்ட ஏகாதசி, அனுமந் ஜெயந்தி, பாவை நோன்பு, படி உற்சவம், திருவெம்பாவை நோன்பு, விநாயகர் சஷ்டி விரதம், உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்களும் விரதங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
‘ஐ ஆம் தி கேங்ஸ்டா’ – துணிவுடன் களமிறங்கும் நடிகர் அஜித்குமார்! வெளிவந்த அப்டேட்..