தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு வாக்களிக்குமாறு ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து தினந்தினம் ட்விட்டர் நிறுவனம் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஏதேனும் ஒரு அதிரடிச் செயலை தொடர்ந்து நிகழ்த்திய வண்ணம் எலான் மஸ்க் உள்ளார். அந்த செயல்கள் சர்ச்சையிலும் சிக்கும் வண்ணம் உள்ளது. தற்போதும் அப்படியாக ஒரு சர்ச்சையில்தான் எலான் மஸ்க் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் நேற்று பாராளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் அமெரிக்காவின் முக்கிய கட்சி தலைவர்கள் ஈடுபட்டனர். அதிபர் ஜோ பைடனும் ஈடுபட்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த தேர்தல் ஆரம்பிக்கும் முன், ‘நடக்க உள்ள பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர்களை அமெரிக்க வாக்காளர்கள் ஆதரித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்’ என எலான் மஸ்க் தெரிவித்தார். மேலும், எலான் மஸ்க் கூறியுள்ள குடியரசு கட்சியில் தான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்ளார்.
இவரின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், ஜோ பைடனின் ஆதரவாளர்களுக்கிடையே கடுப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து சர்ச்சைகளும் எதிரப்புகளும் கிளம்பிய நிலையில், குடியரசு கட்சிக்கு ஆதரவளிக்க சொன்னதற்கான காரணத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பகிரப்பட்ட அதிகாரம் இரு கட்சிகளின் மோசமான அத்துமீறலை கட்டுப்படுத்துகிறது என்றும் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்க பரிந்துரைப்பதாகவும், அதிபர் பதவி என்பது ஜனநாயகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியது பொய்யை பரப்பவே என அதிபர் பைடன் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சர்ச்சையான ‘இந்து’ வார்த்தை; நான் கூறியதில் எந்த தவறும் இல்லை.. கர்நாடக காங்கிரஸ் தலைவர்