மனிதன் உயிர் வாழ அடிப்படைத் தேவை மற்றும் அத்தியாவசியமான ஒன்று தான் தண்ணீர். அதிகளவில் தண்ணீர் குடிப்பது நல்லது தான் என்றாலும், சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க வேண்டுமா அல்லது சாப்பிடுவதற்கு முன்பே தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. மேலும் சிலருக்கு, சாப்பிடும் போதே தண்ணீர் குடிக்கலாமா என்ற சந்தேகமும் உள்ளது. இன்று வரையிலும், இந்த சந்தேகங்கள் உங்களுக்கு இருந்தால், அதற்கான தீர்வை இங்கே காணலாம்.
சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் அருந்த வேண்டும் என மருத்துவ ரீதியாக எந்தவித கட்டாயமும் இல்லை. சாப்பிடுவதற்கு முன்பு தண்ணீர் குடித்தால் சாப்பிடுப் போகும் உணவின் அளவு குறைந்துவிடுமோ என்ற அச்சம் சிலருக்கு எழுவதுண்டு. குறிப்பாக, குழந்தைகள் சாப்பிடுவதற்கு முன்பாகவே தண்ணீர் குடித்தால், சரியாக சாப்பிட மாட்டார்கள் என சிலர் கூறுகின்றனர்.
உண்ணும் உணவானது செரிமானம் அடைய குறைந்தது 2 மணி நேரம் ஆகும். இந்த நேரத்திற்குள் தண்ணீர் குடித்தால், அது உணவு செரிமானம் அடைவதை பாதிக்கிறது. ஆகையால், உணவு உண்ட பிறகு, 45 முதல் 60 நிமிடங்கள் கழித்து தான் தண்ணீர் குடிக்க வேண்டும். அதே போல, உணவு உண்பதற்கு 30 நிமிடத்திற்கு முன்னரே, தண்ணீர் குடிக்க வேண்டும். அதுவே சாலச் சிறந்தது.
சரியான நேரத்தில் தண்ணீர் குடித்தால், பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
1. உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு, தண்ணீர் குடித்தால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும்.
2. சரியான நேரத்தில் தண்ணீர் குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏதும் வராது. செரிமான அமைப்பானது வலுவடையும்.
3. வயிற்றில் உண்டாகும் வாயுத்தன்மை மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகள் நீங்கும்.
4. உணவில் இருக்கும் பல சத்துக்களை உடல் நன்றாக உறிஞ்சிக் கொள்வதால், ஆரோக்கியம் மேம்படும்.
5. நல்ல தூக்கத்தைப் பெறுவதற்கு சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது அவசியம்.
சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் நன்மைகள் உண்டாவது போல, உணவு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் சில தீமைகள் ஏற்படுவதும் உறுதி.
1. உடல் எடை கட்டுக்குள் வராமல், உடல் பருமன் பிரச்சனை ஏற்பட வாய்ப்புண்டு.
2. உணவு செரிமானம் அடைவதில் பிரச்சனைகள் ஏற்படும்.
3. இரத்த சர்க்கரை அளவு உயர்ந்து விடும்.
4. வயிற்றில் வாயுப் பிரச்சனை ஏற்படும்.