உத்தர பிரதேச மாநிலத்தில், ஞானவாபி மசூதி உள்ளது. இதன் வெளிப்புறச் சுவரில் இந்துக் கடவுளான சிருங்கார கவுரி சிலை இருக்கிறது. இச்சிலையை நாள்தோறும் வழிபடுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என இந்துப் பெண்கள் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.
இதனையடுத்து, ஞானவாபி மசூதியில் கள ஆய்வு ஒன்றை மேற்கொண்டு, அதனை, காணொளியாக பதிவு செய்ய வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வில், மசூதி வளாகத்துக்குள் இந்துக் கடவுளான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கள ஆய்வு மேற்கொள்வதற்கு, அனுமதி கொடுத்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மசூதி நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கானது, நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், சூர்ய காந்த் மற்றும் பி.எஸ். நரசிம்மா அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது இந்துப் பெண்கள் சார்பாக வழக்காடிய மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் தவிர்க்க முடியாத சில காரணங்களால் ஆஜராகவில்லை. இதனையடுத்து, இந்த வழக்கை இன்று விசாரிக்க உள்ளதாக நீதிபதிகளின் அமர்வு கூறியது.
இந்த மசூதி பிரச்சனை வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்தனர். அதில், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு வாரணாசி மாவட்ட நீதிபதிக்கு மாற்றப்படுகிறது. இதனை, நீதித்துறையில் மிகுந்த அனுபவம் பெற்ற மூத்த நீதிபதி, விசாரணை செய்ய வேண்டும். மசூதி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் உள்ள பகுதியை, பாதுகாக்க வேண்டும். முஸ்லீம்கள் தொழுகை நடத்த சுதந்திரமாக அனுமதிக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவும் நீடிக்கிறது. ஆய்வு தொடர்பான தகவல்கள் கசிவதை தடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் ஞானவாபி மசூதி வழக்கை வருகின்ற ஜூலை மாதத்தின் 2வது வாரத்திற்கு ஒத்தி வைப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.
நாளை குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்..