சார்பதிவாளர், நகராட்சி ஆணையர் உட்பட 5,529 காலிப்பணியிடங்களுக்காக டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் நாளை நடைபெற உள்ளன.
தேர்வு எழுத வருபவர்கள் காலை 8:30 மணிக்கு தேர்வு எழுத வர வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
நாளை நடைபெறப் போகும் இந்த குரூப் 2, 2ஏ தேர்விற்கு 6.82 லட்சம் பெண்களும், 4.96 லட்சம் ஆண்களுமாக மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இந்த தேர்வினை எழுத தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நாளை காலை 9:30 மணிக்கு ஆரம்பிக்கும் இந்த தேர்வானது மதியம் 12:30 வரை நடைபெற உள்ளது. எனினும் தேர்வு நடத்துவதற்கு வசதியாக இருப்பதற்காக தேர்வர்கள் 8:30 மணிக்குள் வரவேண்டும் என்ற கண்ணோட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக காலை 8:59 மணி வரை வரலாம் என்றும் அதற்கு மேல் கால தாமதம் செய்பவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் தேர்வர்கள் நுழைவுச் சீட்டு பிரதி மற்றும் ஆதார் கார்டு, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஏதாவது ஒன்றின் நகல் மற்றும் அசல் எடுத்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் விடைத்தாளில் குறிப்பதற்கு கருப்பு மைப்பேனாவினை எடுத்து வர வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
செல்போன் உள்ளிட்ட எந்த மின்னணு சாதனத்திற்கும் அனுமதி இல்லை என்றும் அவற்றினை தேர்வு அறைக்கு எடுத்து வந்தால் தேர்வறையிலிருந்து வெளியேற்றப்படுவதுடன், இனி டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எழுத முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
தேர்வர்கள் நுழைவுச் சீட்டில் உள்ள அறிவுறுத்தல்களை நன்கு படித்து அதன்படி நடந்துகொள்ளும் படியும் கூறப்பட்டுள்ளது.