நேற்று நடந்த 68வது ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினை எதிர்கொண்டது.
13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி நான்கு போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
அதே 13 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி எட்டு போட்டிகளில் வென்று 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கிணைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் கைக்கவாட் ஆறு பந்துகளில் இரண்டு ரன்களை மட்டுமே அடித்து பெவிலியன் திரும்பினார்.
இதற்கு பிறகு களமிறங்கிய மொயின் அலி, டீவோன் கான்வேயுடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்டினார். இந்த ஜோடி 39 பந்துகளில் 83 ரன்கள் விளாசியிருந்தது.
16 ரன்கள் அடித்த நிலையில் கான்வே, அஷ்வினின் பந்தில் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார். பின்னர் வந்த நாராயணன் ஜெகதீசன் (1), அம்பத்தி ராயுடு (3) ஆகியோரும் சொற்ப ரங்களில் ஆட்டமிழந்து வந்த வேகத்தில் வெளியேறினர்.
இதற்குப் பிறகு களமிறங்கிய அணித் தலைவர் தோனி 28 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். சிறப்பான தொடக்கத்தை சென்னை அணி பெற்றிருந்த போதிலும், இறுதி ஓவர்களில் ரன் எடுக்கத் தவறியதால் நிர்ணயிக்கப் பட்ட 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது.
சிறப்பாக விளையாடிய மொயின் அலி 57 பந்துகளில் 93 ரன்கள் அடித்தார். ஓபேத் மெக்காய் பந்தில் ரியான் பராக்கிடம் கேட்ச் கொடுத்து தனது சதத்தினை தவறவிட்டார்.
ராஜஸ்தான் அணித் தரப்பில் ஓபேத் மெக்காய், யுவேந்திர சஹால் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளும், ட்ரெண்ட் போல்ட் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
151 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஜெய்ஸ்வால் 44 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இறுதி வரைக் களத்தில் இருந்த அஸ்வின் 23 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அணியினை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
சென்னை அணித்தரப்பில் பிரசாந்த் சோலாங்கி இரண்டு விக்கெட்டுகளும், மொயின் அலி, மிட்செல் சான்ட்னர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஒரு விக்கெட்டினையும், 40 ரன்களையும் அடித்ததற்காக அஷ்வினுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. லக்னோ அணி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்ட நிலையில் இன்று நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் மோதும் போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்பதனைப் பொறுத்து நான்காவது இடம் தீர்மானிக்கப்படும்.
இந்தப்போட்டியில் டெல்லி அணி வெற்றிபெறுமாயின், டெல்லி அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். இல்லையெனில் தற்போது நான்காவது இடத்தில் உள்ள பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
பிளே ஆஃப் செல்லும் கடைசி அணியினை தீர்மானிக்கும் போட்டியாக இருப்பதால் ரசிகர்களிடையே மிகப் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாளை குரூப் 2 தேர்வு; தேர்வர்கள் கவனிக்க வேண்டிய விடயங்கள்..