சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம் என அமெரிக்க வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு மோடி பெயரை அவரின் சமூகம் சார்ந்து பயன்படுத்தி சர்ச்சையாக பேசியது தொடர்பான அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. மேலும், இந்த வழக்கில் ராகுல் காந்தி தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளது.
இந்த மேல்முறையீட்டில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தி தனது எம்.பி. பதவியை திரும்ப பெறுவார். இதுவே, தடை விதிக்கப்படாமல் இருந்தால் ராகுல் காந்தி 2 ஆண்டுகள் சிறை செல்ல நேரும். அதேநேரம், சிறைத்தண்டனைக்கு பிறகு ஆறு ஆண்டுகாலம் எந்தவித பொது தேர்தலிலும் பங்குபெற முடியாத நிலை ராகுல் காந்திக்கு ஏற்படும். மொத்தம் அவருக்கு 8 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிடாமல் போகும் நிலைமை வரலாம் என சட்ட நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இப்படியான சூழல்கள் நிறைந்திருக்க, ராகுல் காந்தி விஷயம் குறித்து உற்றுநோக்கி வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை முதன்மை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளதாவது;
“நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். சட்டமும், நீதித்துறை சுதந்திரமும் தான் ஜனநாயகத்தின் அடையாளம். நாங்கள் ராகுல் காந்தியின் வழக்கை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஜனநாயக மாண்பைப் பேணுவது, கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வது போன்றவற்றில் இந்தியா அமெரிக்கா ஒருமித்த மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்கிறது. மனிதநேயத்தைப் பேணுதல் என்பது இருநாடுகளில் ஜனநாயகக் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. அமெரிக்கா நல்லுறவைப் பேணும் நாடுகளின் எதிர்க்கட்சிகளுடனும் சுமுக உறவைப் பேணவே விரும்புகிறது.”
இவ்வாறு தெரிவித்தார்.
நலன் குமாராசாமி இயக்கத்தில் நடிகர் கார்த்தியா ?