அதிமுக தொண்டர்களின் ஒருமனதான ஆதரவோடு பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் இருதரப்பு வாதங்களும் கடந்த 22 ஆம் தேதி முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பு வழங்கினார். அதில், அதிமுக பொதுக்குழு மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. அதே சமயம் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.
இதையடுத்து, அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை, அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் இருந்து அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை எடப்பாடி பழனிசாமி பெற்றுக்கொண்டார்.
இதையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிசாமி, பல்வேறு சோதனைகளை கடந்து கட்சியின் இருபெரும் தலைவர்களின் கனவை நனவாக்கும் வகையில் ஒட்டு மொத்த தொண்டர்களின் ஆதரவோடு பொதுச்செயலாளர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘அதிமுகவின் அனைத்து தொண்டர்களுக்கும் இந்நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையர் பொதுச்செயலாளராக என்னை அறிவித்துவிட்டார்கள். அதிமுக தொண்டர்களின் ஒருமனதான ஆதரவோடு பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன்’ என குறிப்பிட்டு கூறினார்.
கிராம மக்களை அச்சுறுத்தும் புலி; சத்தீஸ்கரில் ஒருவர் பலி..