இங்கிலாந்திலுள்ள சரணாலயம் ஒன்றில் அழிந்து வரும் விலங்குகளின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்கும் முயற்சியில் விலங்கு ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கிலாந்து நாட்டிலுள்ள செஸ்டர் எனப்படும் சரணாலய நிர்வாகம் அளித்துள்ள பேட்டியின் படி, நேட்சர்ஸ் சேஃப் எனப்படும் திசு வங்கியுடன் சேர்த்து சரணாலயங்களில் இறக்கும் விலங்குகளின் டிஎன்ஏ மாதிரிகளை சேமித்து வைக்கும் பணியில் இறங்கியுள்ளதாகவும், இதன் மூலம் வருங்காலத்தில் அந்த உயிரினமானது அழிவின் விளிம்பிற்குச் செல்லுமாயின், சேமித்து வைத்துள்ள டிஎன்ஏ மாதிரிகளை வைத்து காப்பாற்றலாம் என்றும் கூறியுள்ளனர்.
‘உயிரினங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வரும் இந்த வேளையில், அவற்றினைக் காக்க சரணாலயங்கள் புதுமையான யுத்திகளைக் கையாள வேண்டியுள்ளது. டிஎன்ஏ மாதிரிகளை சேமித்து வைக்கும் இந்த தொழில் நுட்பமானது அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் ஏராளமான உயிரினங்களை காப்பதற்கு உதவியாய் இருக்கும்.’ என்று செஸ்டர் சரணாலயத்தின் அறிவியல் குழுவின் தலைவர் சூ வால்கர் கூறியுள்ளார்.
ஜுராசிக் பார்க் படத்தில் வருவது போன்று சில உயிரினங்களை இந்த தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாக்கலாம். விலங்குகளின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட திசுவானது மைனஸ் 320.8 ஃபாரன் ஹீட் வெப்பநிலையில் (-196 டிகிரி செல்சியஸ்) திரவ நைட்ரஜனைப் பயன்படுத்தி பாதுகாக்கப்படுகிறது.
இந்த முயற்சியானது காலதாமதமான ஒன்று என்று கூறும் அறிவியலாளர்கள், மனிதர்கள் ஒரு பெரிய ‘விலங்குகள் அழிப்பு’ நிகழ்ச்சிக்கு காரணமாய் உள்ளனர் என்றும், இந்த நிகழ்வு டைனோசர் காலத்திற்கு பிறகு முதல் முறையாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளனர்.
எனவே இந்த தொழில்நுட்பத்தின் மூலம் அனைத்து உயிரினங்களையும் காப்பாற்றுவது கடினம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதுவரை அழிந்த உயிரினங்கள் மீட்க முடியாது என்றும், அவைகள் டூடூ பறவைகளை போன்று இந்த உலகத்தினை விட்டே மறைந்து விட்டன என்றும் கூறியுள்ளனர். புறாக்களின் வகையினைச் சேர்ந்த டூடூ என்ற பறவையானது மனிதர்களின் மிகுதியான வேட்டையாடலினால் 17ம் நூற்றாண்டு வாக்கில் முழுவதுமாய் அழிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
யாஷ் நடிச்சாலே இனி அது பான்-இந்தியாதான்! ; கே.ஜி.எஃப் வெற்றியின் எதிரொலி!