உக்ரைன் – இரஷ்யா போர் கடந்த இரு மாதங்களாக நடந்து வரும் நிலையில், இன்னமும் இப்போருக்கு முடிவு எட்டப்படவில்லை. உலக நாடுகளின் பல தலைவர்கள் தலையிட்டும், இரஷ்யா எவரது பேச்சையும் கேட்கவில்லை. மறுபுறம், உக்ரைன் நாடும் எதிர்த்துப் போரிட்டு வர, நாளுக்கு நாள் இரு நாட்டுக்கும் இடையிலான போர் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், போருக்கான ஒரு நாள் செலவு எவ்வளவு என்பதை இரஷ்யா அறிவித்துள்ளது.
அண்டை நாடான உக்ரைன் மீது போர்த்தொடுக்க நாள் ஒன்றுக்கு ரூபாய் 6,900 கோடியை செலவு செய்வதாக, இரஷ்யா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு நாள் போருக்கு, இரஷ்யா இவ்வளவு கோடி ரூபாய் செலவு செய்கிறதா என்று உலக நாடுகள் ஆச்சரியத்தில் உள்ளன.
உக்ரைன் மீது இரஷ்யா போர் தொடுத்து, இன்றோடு 74 நாட்கள் ஆகிவிட்டது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போரின் தாக்கம் என்பது இன்றளவும் சற்றும் குறையாமல் உள்ளது. உக்ரைனைச் சேர்ந்த இலட்சக்கணக்கிலான மக்கள், நாட்டை விட்டு அகதிகளாக அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர். ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் வயது வித்தியாசம் பாராமல், இரஷ்யாவுக்கு எதிராக தைரியத்துடன் போரிட்டு உக்ரைனில் மடிந்து வருகின்றனர். இந்த நிலையில் இரஷ்யாவும் பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறது.
இரஷ்ய வீரர்கள், போர் விமானம், ஹெலிகாப்டர் மற்றும் கவச வாகனம் என இதுவரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போர்க் கருவிகளை இழந்துள்ளது இரஷ்யா. இதனால், சற்றும் மனம் தளராமல் தொடர்ந்து உக்ரைன் மீது போர் நடத்தி வருகிறது. உக்ரைனின் பிரபல பத்திரிகையான “தி கீவ் இண்டிப்பெண்ட்” அளித்த தகவலின் படி, உக்ரைன் மீது இரஷ்யா போர்த் தொடுக்க நாள் ஒன்றுக்கு 900 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது, இந்திய ரூபாய் மதிப்பில் “6,925 கோடி 96 இலட்சம்” ரூபாய் செலவு செய்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வளவு செலவு செய்து ஏன் போரை நடத்த வேண்டும் என பல நாட்டுத் தலைவர்களும், தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்ன தான், பலரும் போரை நிறுத்த முயற்சி செய்தாலும், நாளுக்கு நாள் போர் மட்டும் தீவிரமாக நடந்து வருகிறது. எப்போது இப்போர் முடிவுக்கு வரும் என்பது தான், உலக நாடுகளின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது.
‘நான் மர்மமான முறையில் இறந்துவிட்டால்…..’ – எலான் மஸ்க் பதிவால் அதிர்ந்த ட்விட்டர்!