அரசியல்வாதிகள் சிலர், தனக்குரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் அடிக்கடி கட்சி மாறுவது உண்டு. அப்படி கட்சி மாறும் நிகழ்வு, தற்போது திமுகவில் நிகழ்ந்துள்ளது. திமுக கொள்கை பரப்புச் செயலாளர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிப்பவர் திருச்சி சிவா. இவரது மகனான சூர்யா சிவா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார்.
திமுகவின் மூத்த தலைவரான திருச்சி சிவாவின் மகன், பாஜகவில் இணைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. திமுகவினரை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், திமுகவின் மூத்த தலைவரது மகன், அதிலும் திமுக ஆளுங்கட்சியாக இருக்கும் இந்நிலையில் இச்சம்பவம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று, ஒரு வருடம் நிறைவு பெற்ற நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவரின் மகன் பாஜகவில் இணைந்து இருப்பது, திமுக கட்சியினர் இடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திமுகவின் மூத்த தலைவர் டி. ஆர். பாலுவின் மகன் டிஆர்பி. ராஜா எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாததால், டிஆர் பாலு கடும் அதிருப்தியில் இருக்கிறார். இந்நிலையில், டிஆர்பி ராஜாவுக்கு தமிழக அமைச்சரவையில் இடம் தர இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் திருச்சி சிவா அவர்களின் மகனான சூர்யா சிவா, திமுக கட்சியில் தனக்குரிய அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் பாஜகவில் இணைந்துள்ளார்.
இதுபற்றி சூர்யா சிவா கூறுகையில், ”திமுகவில் 15 ஆண்டுகளாக உழைத்த எனக்கு, கட்சியில் எந்த அங்கீகாரமும் கிடைக்கப் பெறவில்லை. திமுக கட்சித் தலைமை சர்வாதிகாரத்துடன் செயல்பட்டு வருவதால் பலரும் அதிர்ச்சியில் உள்ளனர். இதனால் தான் தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன். எனக்கு திமுக கட்சியில் அங்கீகாரம் கிடைக்கக் கூடாது என்பதை எனது தந்தையும் தடுத்தார் என்பது தான் நிதர்சனமான உண்மை. ஆனால், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டியது தலைமையின் கடமை அல்லவா?” என்று சூர்யா சிவா கேட்கிறார்.
கட்சியிடம், எனக்கு ஏன் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற காரணத்தைக் கேட்டால், கனிமொழியைச் சார்ந்தவன் என்ற உப்பு சப்பில்லாத காரணத்திற்காக எந்த காலத்திலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறுகின்றனர். திமுகவை பொருத்த வரையில், நான் மட்டுமல்லாமல், பல மாவட்ட செயலாளர்களுக்கும் எம்எல்ஏ சீட்டுகள் கொடுக்கப்படவில்லை. அதுவே, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சியில், கிறித்துவப் பெண்ணை திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக, எனக்கு உரிய அங்கீகாரம் தராமல் இருக்கிறார்கள். ஆனால், பிராமணர்களின் பார்வையில் பார்க்கக்கூடிய பாஜக ஆட்சியில், அதுபோல ஒரு சூழல் முற்றிலும் இல்லை என்பதனை நான் இணைந்தது மூலம் உணர முடிகிறது என்று, சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
திமுக “போட்டோ சூட்” அரசியல்தான் செய்து கொண்டிருக்கிறது – விஜய பிரபாகர் பேச்சு!