துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பேரிடரை தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் 7.8 ரிக்டராக பதிவாகியுள்ளது. கிழக்கு துருக்கியில் உள்ள காசியான்டேப் நகரில் பூமிக்கு அடியில் 11 மைல் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், சரியாக நேற்று அதிகாலை 4.17 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்தது.
மேலும், நேற்று ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் அருகிலிருக்கும் லெபனான், சைப்ரஸ், சிரியா நாடுகளிலும் உணரப்பட்டுள்ளது. இதில் சிரியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் கிடைக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தினால் 16 கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், இதில் இதுவரை 4,890-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்நிலையில், துருக்கியில் ஏற்பட்டிருக்கும் பேரிடரை தொடர்ந்து மீட்புப் பணிகளுக்காக இந்தியாவிலிருந்து 100 வீரர்களை கொண்ட 2 குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை இயக்குநர் அதுல் கர்வால் கூறுகையில், இந்தியாவிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு 51 வீரர்கள் கொண்ட குழுவும், காலை 11 மணிக்கு 50 வீரர்கள் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவும் இந்திய விமானப் படையின் விமானம் மூலம் துருக்கிக்கு சென்றுள்ளனர்.
மேலும், பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள், துளையிடும் இயந்திரங்கள், அத்தியாவசியப் பொருள்கள், மருத்துவ உபகரணங்கள், மீட்புப் பணிக்கு தேவையான உபகரணங்களுடன் 5 பெண் வீராங்கனைகள் உள்பட இரண்டு குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.
துருக்கி மற்றும் சிரியாவில் பாதிப்பு கடுமையாக இருப்பதால், இரு நாடுகளிலும் உயிரிழப்பு 10,000-ஐ தாண்டும் என அஞ்சப்படுகிறது. இச்சூழலில், துருக்கியில் இன்று மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 அலகுகளாக பதிவாகியது குறிப்பிடத்தக்கது.
‘தற்போது வெளியானதுதான் காந்தாராவின் இரண்டாம் பாகம்’ – காந்தாரா இயக்குநர் பேச்சு!