காந்தாரா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அப்படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி கருத்து தெரிவித்துள்ளார்.
சமீப காலமாகவே கன்னடத்தில் வெளிவரும் திரைப்படங்கள் இந்திய அளவில் நற்பெயரை சம்பாதித்து வருகின்றது. உதாரணத்திற்கு கே.ஜி.எஃப், 777 சார்லி போன்ற திரைப்படங்களை சொல்லலாம். இந்த வரிசையில் இணைந்த திரைப்படம், காந்தாரா. இத்திரைப்படத்தை கே.ஜி.எஃப் திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ரிஷப் ஷெட்டி, சப்தமி கௌடா, மானசி, கிஷோர் உள்ளிட்டோர் நடிப்பில் காந்தாரா திரைப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி கன்னட மொழியில் மட்டும் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து, அடுத்த சில நாள்களில் டப் செய்யப்பட்டு முக்கிய மொழிகளில் வெளியிடப்பட்டது.
இத்திரைப்படத்தை ரஜினிகாந்த், தனுஷ் உட்பட பல திரையுலக பிரபலங்களும் பாராட்டி பேசினர். 16 கோடி அளவில் தயாரான இத்திரைப்படம் 375 கோடி வசூல் செய்து அசத்தியது.
இந்நிலையில், காந்தாரா திரைப்படத்தின் 100-வது நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேசிய இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் குறித்து முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
அவர் கூறுகையில், ‘தற்போது வெளியானதுதான் காந்தாரா இரண்டாம் பாகம். இதற்கு முந்தைய பாகம் அடுத்தாண்டு வெளியாகும். பல ஆண்டுகளுக்கு முந்தைய கதைதான் காந்தாராவின் அடுத்த பாகமாக இருக்கும். காந்தாரா படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
ரோஸ் டே: சொல்லப்படும் காரணங்கள், ‘கிரிஞ்ச்’ என்ற கொல்லி… அனைத்தையும் மீறி பூக்கும் காதல்!