காதல் மாதம் என்று உலகில் அனைவராலும் கருதப்படுவது, பிப்ரவரி. வருகிற 14-ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக, 7- 13 ஆம் தேதி வரை அன்பை பறைசாற்றும் விதமாக ரோஸ் டே, புரோபசல் டே, சாக்லேட் டே, டெடி டே, ப்ராமிஸ் டே, ஹக் டே, கிஸ் டே போன்ற தினங்கள் கொண்டாடப்படுகின்றன.
காதலை பறைசாற்றுங்கள், அன்பை எடுத்துக்கூறுங்கள் என்ற எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் இன்று கொண்டாடப்படும் ‘ரோஸ் டே’. காதலர் தினத்துக்கு முன்னம் கொண்டாடப்படும் இந்த தினங்கள் பெரும்பாலும் வணிக நோக்கத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்பட்டவையாகத்தான் கூறப்படுகிறது. அதேநேரம், விக்டோரியன்ஸ் தங்களது அன்பை ரோஜாக்கள் மூலம் பகிர்ந்ததாகவும், அதனடிப்படையிலே ரோஸ் டே கொண்டாடப்படுகிறது என்றும் ஒரு கூற்று உண்டு.
இந்த ‘ரோஸ் டே’-வுக்கு எவ்வளவு காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், தற்போது இந்த ரோஸ் டே பலரால் கொண்டாடப்படுகிறது. காதல் என்று மட்டுமல்லாமல், நட்பு, சகோதரத்துவம், பெற்றோர்களிடத்திலும் ரோஜாவைப் பறிமாறி அன்பை பறைசாற்றுவது இன்று உலகம் முழவதும் ஆங்காங்கே நிகழ்ந்து வருகிறது.
தற்போதைய காலக்கட்டத்தில் அன்பின் பித்தில் செய்யப்படுபவை பல ‘கிரிஞ்ச்’ என்ற வகையறாக்குள் வந்து விடுகின்றன. அதில் முக்கியமாக சிக்கியிருப்பது அன்பு. அன்பை வெளிப்படுத்த எடுக்கும் பல முயற்சிகள் ‘கிரிஞ்ச்’ என்ற வகைமைக்குள் சிக்கி விடுகின்றன. ‘ரோஸ் டே’ – வில் என்ன இருக்கிறது? ரோஸ் கொடுத்தால் தான் அன்பா? என்றால் நிச்சயம் இல்லை. அதேநேரம், ஒரு ரோஜாவை தந்து அன்பை பகிர்வதில் எந்த வித ‘கிரிஞ்ச்’ தனமும் இல்லை.
சிறுசிறு பரிசுகளும், அன்பின் சொற்களும், செயல்களும்தான் அன்பை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கான அடிநாதம். அந்த அடிநாதம் இசைக்கப்படமால் உருவாகும் பாடலில் ஏதோ ஒரு ருசி குறைவதாய் தோன்ற அநேக வாய்ப்புகள் இருக்கிறது. ஆகவே, ரோஜாக்களை பகிர்வோம். அன்பை பறைசாற்றுவோம்.
சில நேரங்களில் உறவுகளுக்கு நாம் அனுப்பும் மின் ரோஜாக்கள் கூட ரியல் ரோஜாக்களாக மாறும் விந்தை நிகழும். அன்பில் நிகழும் அநேக விந்தைகள் அன்பை ஜொலிக்க வைப்பதுதான்.