சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உள்ள உதவி இயக்குநர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்குரிய எழுத்துத் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இந்தக் காலிப்பணியிடங்களில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிரப்பப்பட உள்ள 11 உதவி இயக்குநர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்க தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தில் மனையியல் அல்லது உளவியல் படிப்பில் முதுகலைப் பட்டம், குழந்தை வளர்ச்சி, உணவு மற்றும் ஊட்டச்சத்து, சமூகப் பணியியல், மறுவாழ்வு அறிவியல், சமூகவியல் போன்ற படிப்புகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து, சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையில் உள்ள உதவி இயக்குநர் காலிப்பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை நியமிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியிடத்துக்கு விண்ணப்பிப்பதற்கு பதிவுக் கட்டணமாக 150 ரூபாயும், தேர்வுக் கட்டணமாக 200 ரூபாயும் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழி மூலம் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உதவி இயக்குநர் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு கணினி வழித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, நேர்முகத்தேர்வு நடைபெறும். அதன்பிறகு, கணினி வழித் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இந்தக் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பத்தை www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு https://www.tnpsc.gov.in/Document/tamil/15_2022_AD_Social_Welfare_Tamil.pdf என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தில்லி காவல்துறையில் காலிப்பணியிடங்கள்