மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் மொத்தம் 2,268 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான எஸ்எஸ்சி (Staff Selection Commission) தில்லி காவல்துறையில் புதிதாக தேர்வு செய்யப்பட உள்ள தலைமை காவலர்- உதவி வயர்லெஸ் ஆப்ரேட்டர், டெலி-பிரிண்டர் ஆப்ரேட்டர், கான்ஸ்டபிள் (ஒட்டுநர்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த அறிவிப்பின்படி, தலைமை காவலர்- உதவி வயர்லெஸ் ஆப்ரேட்டர், டெலி-பிரிண்டர் ஆப்ரேட்டர் பணியிடங்களில் ஆண்களுக்கு 573 காலிப்பணியிடங்களும், பெண்களுக்கு 284 காலிப்பணியிடங்களும் உள்ளது.
மேலும், இப்பணிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 27 வரையிலும், மாத ஊதியமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வரை நியமிக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், மெக்கானிக் மற்றும் ஆப்ரேட்டர் எலக்ட்ரானிக் கம்யூனிகேசன் சிஸ்டத்தின் வர்த்தகத்தில், தேசிய வர்த்தக சான்றிதழ் பெற்றிருப்பவர்கள் மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள மற்றொரு பணி காவலர் ஓட்டுநர் பணியாகும். இதில் 1411 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிக்கான மாத ஊதியம் ரூ.21,700 முதல் ரூ.69,100 ஆகும்.
இந்த காவலர் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓட்டுநர் உரிமம் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். இப்பணிக்கான வயது வரம்பு 21 முதல் 30 வரை.
கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வுகள் அடிப்படையில் தகுதியானவர்கள் மேற்கூறிய அனைத்து பணியிடங்களுக்கும் தேர்வு செய்யப்படுவர்.
மேற்கூறிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளோர் https://ssc.nic.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு ஜூலை 29-ம் தேதியே இறுதி நாளாகும்.
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது