வேலூர் மாவட்டத்தில் தன் நான்கு பெண் குழந்தைகளில், இரு பெண் குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்ய முயன்ற தாய் சத்யாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை அடிப்படையில் விடுதலை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு வேலூர் மாவட்டம் பொன்னை காவல்நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் வெங்கடேசன் – சத்யா தம்பதியினருக்கு நான்கு பெண் குழந்தைகள் பிறந்தது. தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததால் சத்யா, தனது இரண்டு பெண் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால், சத்யா உயிர்பிழைத்தார்.
இந்நிலையில், தொடர்ந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்தமையால் துரதிருஷ்டசாலி என கேலி கிண்டலுக்கு உள்ளானதால் இந்த முடிவை சத்யா எடுத்ததாக தகவல்கள் வந்தது.
இச்சம்பவத்தில் 302 மற்றும் 309 சட்டப்பிரிவின் படி பொன்னை காவல்துறையினாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து சத்யாவை கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த வேலூர் விரைவு நீதிமன்றம், சத்யாவுக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சத்யா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு கடந்த ஜூலை 20-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின்போது பிறப்பித்த உத்தரவில், குற்றவாளிகள் நன்னடத்தை சட்டம், 1958ன் பிரிவு 4-ன் கீழ், இந்த வழக்கில், பெண்ணை தண்டிப்பதற்கு பதிலாக விடுதலை செய்வதே பொருத்தமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறியிருப்பதாவது :
நாம் ஒரு சமுதாயமாக நம்மை திருத்திக்கொள்ளவில்லை. தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்ததால், அவமானப்படுத்தப்பட்டு, அப்பெண், தனது மகள்களைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்திருப்பது என்பது மிகவும் வேதனையான விஷயம்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, தங்களது மகள்களின் கல்வி மற்றும் நலன் குறித்து உறுதி செய்ய வேண்டும். அதை செய்ய தவறும்பட்சத்தில் தண்டனையை அனுபவிக்க சிறைக்குச் செல்ல நேரிடும்.
மேலும், மனைவி சத்யாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் என சத்யாவின் கணவர் வெங்கடேசன் உறுதிமொழி பத்திரம் அளிக்க வேண்டும்.
தொடர்ந்து பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்த சத்யா, தனது இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். இதில் 2 மகள்களும் பலியான நிலையில், 2 பெண் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்கள்.
இவ்வாறு நீதிபதி பரத சக்கரவர்த்தி கூறினார்.
மேலும், இந்த வழக்கை ‘நல்லதங்காள்’ கதையுடன் ஒப்பிட்ட நீதிபதி, உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது தனது இரண்டு மகள்களுடன் விசாரணைக்கு ஆஜரான சத்யா, நடந்த சம்பவம் குறித்து கடும் வேதனையை வெளிப்படுத்தினார். ஆண் குழந்தைகள் போலவே பெண் குழந்தைகளும் நல்லவர்கள்தான், இப்போது இந்த சமுதாயத்தை எதிர்கொள்ளும் தைரியம் தனக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறியதாக நீதிபதி பாரத சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
நல்லதங்காள் கதையில், நல்லதங்காள் எனும் தாய் தன் பசியில் வாடும் தன் ஏழு குழந்தைகளையும் கிணற்றுக்குள் வீசி கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துக்கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவியின் உடற்கூராய்வு அறிக்கைகளை ஆய்வு செய்ய வேண்டும்- உயர்நீதிமன்றம்