நிதியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான, கணினி வழித் தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு கல்விப் பணிகளில் உள்ள நிதியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, நிதியாளர் பதவிக்கான நேரடி நியமனம் கணினி வழித் தேர்வின்படி நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.
அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக 5 பணியிடங்கள் தற்போது உள்ளன. இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூபாய் 56,100 முதல் 2,05,700 வரை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பானது 32-க்குள் இருக்க வேண்டுமென்றும், பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டம் அல்லது வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் முடித்தவர்களே இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியுமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி ஆள்சேர்ப்பு படி கணினி வழித் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு மையங்களாக, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தை அனுகவேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியாக 10.12.2022 அறிவிக்கப்பட்டுள்ளது.