Sunday, March 17, 2024
மேலும்
    Homeஆன்மிகம்சிவபெருமானின் உணர்ச்சிமிகு தேவாரப்பாடல் - தோடுடைய செவியன் பாகம் 2

    சிவபெருமானின் உணர்ச்சிமிகு தேவாரப்பாடல் – தோடுடைய செவியன் பாகம் 2

    திருக்கோயில் சிகரத்தை பார்த்து, அம்மையே அப்பா என்று அழைத்தவாறு குழந்தை அழுதது. காலம் கனிந்து வந்தமை கண்டு பெருமான் குழந்தைக்கு அருள் செய்ய திருவுள்ளம் கொண்டவராய், தேவியுடன் தாமும் விடையின் மீது அமர்ந்தவராக குழந்தை இருந்த இடத்திற்கு அருகே வந்தார். அருகே வந்தவர், தேவியை நோக்கி, உனது திருமுலைப்பாலை ஒரு பொற்கிண்ணத்தில் பொழிந்து குழந்தைக்கு ஊட்டுவாய் என்று கூறினார். தேவியும் உடனே, பொற்கிண்ணத்தில் பாலை வைத்துக் கொண்டு, குழந்தையின் அருகே சென்று குழந்தையின் கண்களில் பெருகிய நீரினை துடைத்து, அடிசிலை உண்ணுவாய் என்று கூறினார். எண்ணரிய சிவஞானம் குழைத்து கொடுக்கப்பட்ட பால் என்று சேக்கிழார் கூறுகின்றார். வள்ளம்=கிண்ணம்

    அழுகின்ற பிள்ளையார் தமை நோக்கி அருட்கருணை

    எழுகின்ற திருவுள்ளத்து இறையவர் தாம் எவ்வுலகும்

    தொழுகின்ற மலைக் கொடியைப் பார்த்து அருளித்துணை

    முலைகள்பொழிகின்ற பால் அடிசில் பொன் வள்ளத்து ஊட்டென்ன

    எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்து அருளி

    உண் அடிசில் என ஊட்ட உமையம்மை எதிர் நோக்கும்

    கண் மலர் நீர் துடைத்து அருளிக் கையில் பொற்கிண்ணம் அளித்து

    அண்ணலை அங்கு அழுகை தீர்த்து அங்கணனார்அருள் புரிந்தார்

    குழந்தைக்கு பிராட்டி ஊட்டிய பாலமுதம் வெறும் பசியினை போக்குவதை மட்டுமாக இல்லாமல், சிவஞானமும் கலந்து குழைத்து ஊட்டப்பட்டது என்று சேக்கிழார் மேற்கண்ட பாடலில் கூறுகின்றார். இவ்வாறு அம்மை ஊட்டிய பாலடிசிலை உண்ட குழந்தை, சிவபெருமானின் திருவடிகளை சிந்திக்கும் தன்மையையும் சிவபெருமானே மேலான பரம்பொருள் என்ற கலை ஞானத்தையும் பிறவிப்பிணியினை தீர்க்கவல்ல மெய்ஞானத்தையும் உணர்ந்தது என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் கூறுகின்றார். குழந்தையின் கண்களில் வடியும் நீரை துடைத்து, பாலை குடிக்குமாறு கூறி அழுகை தீர்த்த தேவியார், குழந்தை பால் குடித்து முடித்த பின் வாயை துடைத்ததாக பெரிய புராணத்தில் எங்கும் கூறவில்லை. அன்றாட வாழ்க்கையில் நாம் குழந்தைக்கு சோறு ஊட்டிய பின்னர், குழந்தையின் முகத்தையும் வாயினையும் நன்றாக அன்னைமார்கள் துடைப்பதை காண்கிறோம். ஞானப்பால் குழந்தை குடித்ததை உலகு அறியச் செய்யக் கருதிய பார்வதி தேவியார் அன்று குழந்தையின் வாயை, கடைவாயில் வழிந்து கொண்டிருந்த பால் துளியை, துடைக்கவில்லை போலும் அவ்வாறு துடைத்திருந்தால் குழந்தையின் தந்தை எவ்வாறு குழந்தையை கேள்வி கேட்பார்? குழந்தை ஞானப்பால் குடித்ததை உலகறியும் வண்ணம் இந்த நிகழ்ச்சி நடந்தேறியது. பரமனும் தேவியும் விடையுடன் மறைந்தனர்.

    அவ்வமயம் கரையேறிய தந்தையார், குழந்தையின் வாயினில் இருந்த பாலின் துளியைக் கண்டு மிகுந்த கோபம் கொண்டவராய், தனது கையில் ஒரு குச்சியை ஏந்தியவராய், யார் கொடுத்த பாலடிசிலை நீ உண்டனை, எச்சில் மயங்கிட உனக்கு இட்டாரை காட்டு என்று மிரட்டினார். குழந்தை கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக, உச்சி மேல் குவித்த கைகளை எடுத்து ஒரு விரலாலே திருக்கோயிலின் கோபுரத்தை காட்டி, தோடுடைய செவியன் என்ற பதிகத்தை (முதல் திருமுறை, முதல் பதிகம்) பாடியவாறு, அம்மையப்பன் தான் தனக்கு பாலடிசில் அளித்தார் என்று உணர்த்தினார். தேவர்கள் பூமாரி பொழிய, நடந்த அதிசயத்தின் தாக்கத்தை தந்தையார் உணர்ந்தார். ஞானப்பால் குடித்த பின்னர் ஞானத்தின் தொடர்பு ஏற்பட்டு இறைவனைப் புகழ்ந்து பாடல்கள் பாடிய குழந்தையை அனைவரும் ஞானசம்பந்தர் என்று அழைத்தனர். குழந்தையின் இயற்பெயர் என்னவென்று பெரிய புராணத்தில் எங்கும் குறிப்பிடப் படவில்லை.

    இந்த பதிகத்தின் பாடல்களில் பெருமானின் அடையாளங்கள் உணர்த்தப்பட்டு, அவனே பெருமைக்கு உரிய தலைவன் என்று ஒவ்வொரு பாடலில் கூறப்படுவதால், சைவ சமயத்திற்கு தலை சிறந்த ஆசானாக திருஞான சம்பந்தர் கருதப் படுகின்றார். ஆன்மாக்களுக்கு இறைவனையும், இறைவனை அடையும் வழிகளையும் உணர்த்தி உயிர்கள் தங்களது வினைகளைத் தீர்த்துக்கொண்டு இன்பமடையும் வழியை உணர்த்துவது ஆச்சாரியரின் இயல்பு என்பதால், அவ்வாறு தனது முதல் பதிகத்தில் உணர்த்திய, திருஞான சம்பந்தரை, சைவசமயத்தின் முதல் ஆசாரியராக கருதுகின்றனர். இந்த காரணம் பற்றியே, சம்பந்தர் அருளிய பாடல்களை முதல் மூன்று திருமுறைகளாக நம்பியாண்டார் நம்பியார் வகுத்தார் போலும்.

    தமிழ் மொழியினைக் குறிப்பிடும் த் என்ற மெய்யெழுத்து மற்றும் வேதங்களின் முதற்சொல்லாகிய ஓம் என்ற எழுத்தையும் இணைத்து தோ என்ற எழுத்து முதல் எழுத்தாக வரும் வண்ணம் தோடுடைய செவியன் என்று பதித்தினை தொடங்கினார் என்று சேக்கிழார் கூறுகின்றார். மேலும் அடியார்கள் பாடும் பாடலைக் கேட்கும் உடல் கருவியாகிய செவியினையும் பிள்ளையார் சிறப்பித்தார் என்றும் கூறுகின்றார். இந்த உலகத்தில் உள்ள உயிர்கள், சிவத்தன்மை பெற்று செம்மையாக விளங்க வேண்டுமென்ற நோக்கத்துடன் பாடப்பட்ட பதிகம் என்றும் உண்மையான மெய்ப்பொருளாகிய பெருமானை சுட்டிக் காட்டி உணர்த்தும் பதிகம் என்றும் சேக்கிழார் குறிப்பிடும் பாடல் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது.

    செம்மை பெற எடுத்த திருத்தோடுடைய செவியன் எனும்

    மெய்ம்மை மொழித் திருப்பதிகம் பிரமபுரம் மேவினார்

    தம்மை அடையாளங்களுடன் சாற்றித் தாதையார்க்கு

    இம்மை இது செய்த பிரான் இவன் என்றே என இசைத்தார்.

    தோடுடைய செவியன் கதை உங்களுக்கு தெரியுமா? இதோ முதல் பாகம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....