சந்திர கிரகணம் நாளை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 8) நடைபெற உள்ளது.
சந்திர கிரகணம் நவம்பர் 8 ஆம் தேதியான நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 02.39 மணி முதல் மாலை 06.19 வரை நடைபெற இருக்கிறது. இந்த சந்திர கிரகணம் இந்திய நேரப்படி பிற்பகல் 02.48 முதல் மாலை 6.19 மணி வரை நிகழும் என கூறப்படுகிறது.
நாளை நிகழ உள்ள சந்திரக் கிரகணத்தை வடக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்ற பகுதிகளிலும், பசிபிக், அட்லாண்டிக், இந்திய மற்றும் ஆட்ரிக் பெருங்கடல் பகுதிகளும் காண முடியும்.
இந்தியாவை பொறுத்தவரையில், கொல்கத்தா உள்பட கிழக்கு பகுதிகளில் மட்டுமே சந்திர கிரகணத்தை காண முடியும். மற்றப் பகுதிகளில், பகுதி சந்திரக் கிரகணத்தை காண முடியும்.
இதன் காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயில் காலை 8.40 மூடப்படும். பிறகு, இரவு 07.30 மணிக்கு சந்திர கிரகணம் முடிந்தவுடன் திறக்கப்படும். அதவாது, திருப்பதி கோயில் 11 மணி நேரம் மூடியே இருக்கும்.
சந்திர கிரகணத்தையொட்டி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படும். காலை 9.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சுவாமி பலகனி கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும் என்றும், நாளைய தினம் அன்னாபிஷேகம் காலை 7 மணிக்கு நடைபெறும் என்றும், இரவு 7.30 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை சந்திர கிரகணத்தை முன்னிட்டு அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலில் பூஜை நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மாலை 5.47 மணி முதல் 6.25 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஈரோடு மாவட்டம் பன்னாரி மாரியம்மன் கோவிலிலும் சந்திரகிரகன நாளான நாளை மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை ஆறரை மணி நேரம் மூடப்பட்டிருக்குமாம் .இதனால் அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர அருள்மிகு பெரியாவுடையார் திருக்கோயிலிலும் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேகம், மகா அபிஷேகம் பூஜைகள் நடத்தப்பட்டு நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கோவையில் உள்ள ஆனைமலை மாசாணியம்மன் திருக்கோயிலில் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடை சாத்தப்பட்டு, மீண்டும் அடுத்த நாள் காலை எப்போதும் போல் 6 மணிக்கு நடை திறக்கப்படும்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் நடை காலை 9 மணி முதல் இரவு 7.30 வரை சாத்தப்பட்டு, மீண்டும் இரவு 7.31க்கு திறக்கப்படும் எனவும், அதேபோல் ராமேஸ்வரம் கோயிலில் நண்பகல் 1 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு, தீர்த்தம் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வழக்கம் போல காலை 6.15 மணிக்கு திறக்கப்படும். காலை 10.45 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர், மாலை 6.15 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2024-ஆம் ஆண்டில் உலகக் கோப்பை எங்கே நடைபெறுகிறது? – வெளிவந்த முக்கிய தகவல்கள்!