ட்விட்டர் ஊழியர்களின் பணி நீக்க நடவடிக்கையை எலான் மஸ்க் தொடங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
எலான் மஸ்க் ட்விட்டரை தன் வசப்படுத்தியதும் ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓவும், இந்தியருமான பராக் அக்ரவால், தலைமை நிதித்துறை அதிகாரி நேத் சேகல், சட்டம் மற்றும் திட்டத்துறை தலைமை அதிகாரி விஜயா கட்டே மற்றும் முக்கிய உயர் அதிகாரிகளை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார்.
இதுமட்டுமல்லாது, இனி ட்விட்டரில் பல்வேறு மாறுபாடுகள் நிகழும் என தகவல்கள் வெளிவந்தன. அவற்றுள் ஒன்றாக, ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க எலான் மஸ்க் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்தகவல் ட்விட்டர் ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன்மூலம், ட்விட்டரில் பணிபுரியும் 7400 ஊழியர்களில் 3700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ட்விட்டர் நிறுவனத்தில் வீட்டிலிருந்தபடியே வேலைப்பார்க்கும் முறையையும் எலான் மஸ்க் நீக்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில், ட்விட்டர் ஊழியர்களின் நீக்க நடவடிக்கையை எலான் மஸ்க் தொடங்கி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பணி நீக்கம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு இமெயில் மூலம் அவர் தகவல் தெரிவித்துள்ளதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் என்று அந்த மெயிலில் கூறப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.
முன்னதாக, ட்விட்டர் ப்ளு டிக்கிற்கு 8 அமெரிக்க டாலர்கள் (ரூ.660) வசூலிக்கப்படும் என எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஃபிரிட்ஜ் வெடித்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி! செங்கல்பட்டில் நடந்த கோர சம்பவம்