சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படங்களான படையப்பா, முத்துவைத் தொடர்ந்து ரஜினிகாந்தும் கே.எஸ்.ரவிகுமாரும் இணையும் திரைப்படம், 4 வருடங்களுக்குப் பிறகு இயல்பான பாணியில் ரஜினிகாந்த நடிக்கும் திரைப்படம், ஏ.ஆர்.ரகுமான் இசை என லிங்கா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது உச்சத்தை அடைந்துகொண்டே சென்றது.
ஆனால், இந்த எதிர்பார்ப்பை லிங்கா திரைப்படம் பூர்த்தி செய்யாமல் போக மீண்டும் ஒரு தோல்விப் படத்துக்கு சொந்தக்காரர் ஆனார் ரஜினிகாந்த். அதுமட்டுமல்லாமல் , லிங்கா திரைப்படம் பல கேளிக்கைகளுக்கும் உள்ளானது.
தோல்வியில் இருந்து எழ, திரைத்துறையில் மீண்டும் ஓட ரஜினிக்கு கிடைத்த திரைப்படங்கள்தான் கபாலியும், காலாவும். பெரும்பான்மையான மக்களிடத்தில் இந்த இரு திரைப்படங்களும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால், மீண்டும் ஒரு முறை தான் யாரென்பதை திரையுலகுக்கு நிரூபித்தார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
காலா வெளியான அதே வருடம் மற்றொரு திரைப்படத்துக்கு இந்திய திரை ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்புடன் காத்திருந்த திரைப்படம்தான் 2.0. எந்திரனின் இரண்டாம் பாகமான இத்திரைப்படத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. மேலும், 3டி முறையில் இத்திரைப்படம் தயாரானது கூடுதல் எதிர்பார்ப்புக்கு வித்திட்டது. இப்படியான சூழலில் கலவையான விமர்சனங்களுடன் 2.0. வசூலில் பல சாதனைகளை செய்தது.
தென்னிந்திய சினிமாவில் கருப்பு வெள்ளையில் ஆரம்பித்து, கலர், இயக்கம் கைப்பற்றல் (Motion Caption), 3டி என்ற திரை பரிணாமங்களில் வளம் வந்தவர் நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே.. ஆனால், ரஜினிகாந்த் ரசிகர்களுக்கும், பொதுவான திரைப்பிரியர்களுக்கும் எண்பதுகளில், தொண்ணூறுகளில் உள்ள ரஜினிகாந்தை காண வேண்டுமென்ற ஆவல் இருந்துகொண்டே இருந்தது. கபாலி, காலா வெற்றிப்படமாக அறியப்பட்டாலும், அவை இயல்பான ரஜினிகாந்த் திரைப்படமாக இல்லை.
இம்மாதிரியான சூழலில்தான், ரஜினிகாந்தின் ரசிகர் என்று தன்னை வெளிப்படையாக கூறிக்கொண்டு, பேட்ட எனும் அதிரடி திரைப்படத்தை கொடுத்தார் கார்த்திக் சுப்புராஜ். ரஜினிகாந்தை எவ்வாறு காண பெரும்பான்மை கூட்டம் காத்திருந்ததோ அந்த ரஜினியை பேட்ட திரைப்படம் அவர்களுக்கு தந்துவிட்டது.
இனி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஏறுமுகம் தான் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்பிரியர்களும் முடிவுக்கு வர.. இல்லை அப்படி இல்லை என்பதைப் போல, தர்பார் மற்றும் அண்ணாத்த திரைப்படங்கள் அமைந்துவிட்டன. வணிக ரீதியாக சாதித்தாலும் இரு திரைப்படங்களுக்கும் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது.
தற்சமயம், திரைப்பட ரசிகர்கள் ரஜினிகாந்தின் அடுத்த திரைப்படமான ஜெயிலர் திரைப்படத்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைத்துறையில் 47 ஆண்டுகளை பூர்த்தி செய்கிறார்.
47 ஆண்டுகளாக ஒரு கலைஞன் ஒரு துறையை ஆட்டிப்படைப்பது என்பது வியப்புக்குரிய ஒன்றுதான்.. இப்போதும் ரஜினிகாந்தின் திரைப்படம் வெளியாகும் நாள் வெறும் நாளாக இருந்தாலும், அது திருநாளாக மாறுகிறது.
இந்தியா மட்டுமல்ல, உலகெங்கிலும் பல நாடுகளில் இவரின் திரைப்படத்துக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். திரைப்பட வெளியீட்டு நாளை கொண்டாடுகிறார்கள்.
ஆறிலிருந்து அறுபது வரை அல்ல மட்டுமல்ல, உயிர் துறக்கும் வரையிலும் ரஜினியை ரசித்துக்கொண்டிருக்கும் கூட்டம் இங்கே உள்ளது. ‘தலைவா..தலைவா..’ என்று ரசிகர்கள் அழைக்கும் விதத்திலேயே ரஜினிகாந்தின் மீது அவர்களுக்கு இருக்கும் அன்பை நம்மால் அறிய முடிகிறது.
ஏற்றமும் இறக்கமும் ரஜினிகாந்திற்கு புதிதல்ல..திரையுலகைப் பொறுத்தவரையில் பலரும் நம்பும் பந்தயக்குதிரையே ரஜினிகாந்த்.
ரஜினியின் சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதா? – சூப்பர்ஸ்டார் ஸ்பெஷல்!