இலங்கையில் அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் வரும் 19-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என அந்நாட்டின் நாடாளுமன்ற செயலாளர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ஆளும் அரசுக்கு எதிராக இலங்கை மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஜூலை 9ம் தேதி இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனிடையே, அதிபர் மாளிகையை விட்டு கோத்தபய ராஜபக்சே வெளியேறினார்.
இதையடுத்து இலங்கையில் அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, கோத்தபய ராஜபக்சே தனது அதிபர் பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்தார்.
அதனை தொடர்ந்து, கோத்தபய ராஜபக்சே நேற்று தனது பதவியை ராஜிநாமா செய்ததார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் இடைக்கால அதிபராக நேற்று பதவியேற்றார்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தலைமையில் இன்று நாடாளுமன்றம் கூடியது. இந்தக் கூட்டத்தில் கோத்தபய ராஜபக்சேவின் ராஜிநாமா கடிதம் வாசிக்கப்பட்டது.
அதன்பின்னர், இலங்கை நாடாளுமன்றம் வரும் 19-ம் தேதி மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டது. மேலும், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்களும் 19-ம் தேதியே ஏற்றுக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற செயலாளர் அறிவித்தார்.
இலங்கை அதிபர் தேர்தலில் தற்போதைய இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் அமைச்சர்கள் அனுர யாப்பா அபேவர்தன, டலஸ் அழகப்பெரும, முன்னாள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா போன்றோர் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேட்டூர் அணை நிரம்பியது- 16 கண் மதகு வழியே தண்ணீர் திறப்பு