இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் 16 கண் மதகும் திறந்துவிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து கடந்த 8-ம் தேதி முதல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. கடந்த 5 நாள்களாகவே மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.29 அடியாகவும் நீர் இருப்பு 90.92 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கான நீர்வரத்து 1.18 லட்சம் கன அடியாக இருந்தது. அதேபோல், அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது.
மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியதால், அணையின் 16 கண் மதகும் திறந்துவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மேட்டூர் அணையின் இடது கரையான 16 கண் பாலம் பகுதியில் காவிரி அன்னைக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில், பொதுப்பணித்துறையின் மேட்டூர் அணையின் நிர்வாகப் பொறியாளர் சிவகுமார், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், அணைப்பிரிவு உதவி பொறியாளர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேட்டூர் அணை: கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை