நம் நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் அவர்களின் தேவைக்கேற்ப குறிப்பிட்ட சில தெய்வங்களை குறிப்பிட்ட சில மாதங்கள், மற்றும் நட்சத்திர தினங்களில் வழிபட்டு மிகுதியான பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் வைகாசி மாதம் என்பது முருகப்பெருமானின் வழிபாட்டிற்குரிய ஒரு மாதம் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
வருடத்தை ஆறு காலங்களாக வகுத்த நம் முன்னோர்கள் சித்திரை, வைகாசி இரண்டு மாதங்களையும் இளவேனில் காலமாகப் பிரித்தனர். வைகாசி என்பதை விகாஸம் என்றும் கூறுவதுண்டு. விகாஸம் என்றால் மலர்ச்சி என்றும் பொருள். வைகாசியே வடமொழியில் வைஸாகம். வைணவர்கள் இம்மாதத்தை மாதவ மாதம் என்றழைப்பார்கள்.
கிருத்திகை என்றால் என்ன?
கிருத்திகை என்பது ஆறு நட்சத்திரங்கள் இணைந்த கூட்டத்தின் பெயர். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் பிறந்த ஆறு அக்னிகளும் ஆறு குழந்தைகளாக சரவணப்பொய்கையில் சேர அவற்றை வளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அதனால் முருகப்பெருமான் கார்த்திகைப் பெண்களைத் தன் தாயினும் மேலாகப் போற்றுவார். கார்த்திகைப் பெண்களே கார்த்திகை நட்சத்திரங்களாயினர். எனவே, கார்த்திகை நட்சத்திர நாளில் முருகப்பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியது.
இம்மாதத்தில் வருகின்ற வைகாசி கிருத்திகை தினம் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய மிகவும் சிறப்பான ஒரு தினமாகும். இந்த அற்புதமான தினத்தில் நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை குறித்து இங்கு தெரிந்துக் கொள்ளலாம்.
முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக சிறந்த மாதமாக வைகாசி மாதம் இருக்கிறது. கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். அதிலும் நாளை சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் கிருத்திகை தினம் வருவது மிகவும் சிறப்பானதாகும்.
வழிபடும் முறை :
முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு, பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு கிருத்திகை விரதத்தை முடிக்க வேண்டும்.
வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு செவ்வரளி, சிவப்பு ரோஜா போன்ற மலர்களை சமர்ப்பித்து தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
கிருத்திகை நட்சத்திர விரத பலன்கள்:
கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.
மேலும், கோயிலுக்கு வெளியே இருக்கும் யாசகர்களுக்கும், வசதியற்ற ஏழை மக்களுக்கும் தயிர் சாதம், எலுமிச்சை சாதம் போன்றவற்றை இந்த தினத்தில் அன்னதானம் செய்வது மிக நல்லது.
நம்ம வாகனத்தை, நாம நல்லா பார்த்துக்கிட்டோம்னா, வாகனம் நம்மள பாதுகாக்கும்!