நேற்று நடந்த இரண்டாவது குவாலிஃபையர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணியானது இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளது.
அஹமதாபாத் மைதானத்தில் நேற்று ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடந்தது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பௌலிங்கினைத் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ராஜத் பட்டிதார் 42 பந்துகளை எதிர்கொண்டு 58 ரன்கள் எடுத்தார். டு பிளெஸிஸ் 25 ரன்களும், மேக்ஸ்வெல் 24 ரன்களும் எடுத்தனர். ஒரு வலுவான கூட்டணியினை அமைக்கத் தவறினர்.
சிறப்பாக பந்து வீசிய ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை எடுத்தது ராஜஸ்தான் அணிக்கு வலு சேர்த்தது. இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசிய பிரஷித் கிருஷ்ணா, ஓபேத் மெக்காய் தலா மூன்று விக்கெட்டுகளை எடுத்தனர். ரவிச்சந்திரன் அஸ்வின், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.
158 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் அதிரடியான தொடக்கத்தினை அளித்தார். 13 பந்துகளில் 21 ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால், ஹேசல்வுட் பந்தில் கோலியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பின்னர் வந்த சஞ்சு சாம்சன் 21 பந்துகளில் 23 ரன்கள் அடித்து ஹஸரங்கா பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
ஜோஸ் பட்லர்..
ஒரு பக்கத்தில் இவ்வாறு ராஜஸ்தான் அணியினர் அதிரடி காட்டிக்கொண்டிருக்க மறுபக்கம் ஆடிய ஜோஸ் பட்லர் ஒரு பெங்களூரு அணி வீரர்கள் செய்யத் தவறியதை சிறப்பாக செய்து கொண்டிருந்தார்.
60 பந்துகளை எதிர் கொண்ட பட்லர் 10 ஃபோர் மற்றும் ஆறு சிக்ஸர் உட்பட 106 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார். ஆட்ட நாயகன் விருது பட்லருக்கு கொடுக்கப்பட்டது.
ஒரே ஐபிஎல் தொடரில் நான்கு சதங்கள் அடித்து, அதிக சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் விராட் கோலியுடன் இணைந்துள்ளார். 824 ரன்கள் அடித்து இந்த தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் பட்லர்.
இந்த போட்டியில் ஒரு விக்கெட்டினை எடுத்ததன் மூலம் ஹஸரங்கா அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களில் முதலிடத்தினைக் கைப்பற்றியுள்ளார். சஹால் மற்றும் ஹஸரங்கா ஆகிய இருவருமே 26 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் ராஜஸ்தான் அணி இறுதிப்போட்டியில் மோதுகிறது. இவ்விரு அணிகளும் பிளே ஆஃப்-ன் முதல் குவாலிஃபையர் போட்டியில் விளையாடியிருந்தன. இப்போட்டியில் குஜராத் அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
நாளை இரவு 8 மணிக்கு நடைபெறும் இப்போட்டியானது அகமதாபாத்தில் உள்ள இதே மைதானத்தில் நடைபெறுகிறது.
நிறைவுப் போட்டியினை சிறப்பிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோருடைய சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சீறுமா குஜராத்? ராயலாக விளையாடுமா ராஜஸ்தான்?