முதலில் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டும் முறையை நன்கு அறிந்து ஓட்ட வேண்டும். உங்களது கார் முடிந்தவரை உங்கள் கைப்பட இருப்பது நல்லது. வாகன பராமரிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினால், கணிசமான பணத்தை மிச்சம் செய்ய முடியும் என்பதோடு, கசப்பான அனுபவங்களில் இருந்தும் தப்பிக்கலாம்.
வாகனம் வாங்கும்போது, அதற்காக நாம் எவ்வளவு நேரம் செலவழித்தோமோ, அதில் கொஞ்ச நேரம் கார் பராமரிப்புக்காகத் தினமும் செலவழித்தால் தான் காரினால் ஏற்படக் கூடிய சுகங்களை முழுமையாக அனுபவிக்க முடியும்.
கார் பராமரிப்பில் மிகவும் முக்கியமான, சுலபமான விஷயம் கார் வாஷிங்தான். காரைத் துடைத்து சுத்தமாக வைப்பதுதான் அடிப்படைப் பராமரிப்பு. வாரம் ஒருமுறை காரை நன்றாகக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும். நம்மில் பலர் இதை செய்வதே இல்லை.
சூடாக இருக்கும் எஞ்சினைச் சுற்றி எந்தச் சமயத்திலும் ஈரமான துணியை வைத்துத் துடைக்காதீர்கள். இதனால், விபத்துகள் நிகழ வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வாஷர் ஜெட்டுகள், சரியாக கண்ணாடியில்தான் தெரிகிறதா என்று கவனிக்கவும். இல்லையென்றால், அதை முதலில் அட்ஜஸ்ட் செய்யுங்கள் மற்றும் வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கிறதா என்று பாருங்கள். அதை தினமும் சுத்தப்படுத்த மறக்காதீர்கள்.
விண்ட் ஸ்கிரீன் வாஷர், பவர் ஸ்டீயரிங் ஆயில், கூலன்ட், பிரேக் ஆயில் ஆகியவை சரியான அளவு இருக்கிறதா என்று தவறாது செக் செய்ய வேண்டும். எச்சரிக்கை விளக்குகள் ஒளிரும் வரை காத்திருக்க வேண்டாம். அனைத்து வாகனங்களிளும், ஒரு குறிப்பிட்ட கி.மீக்கு மேல் ஆயில், ஏர் ஃபில்டர், பிரேக் பேட் போன்றவற்றை மாற்ற வேண்டும் என்பது கட்டாயம்.
ஹெட் லைட்டுகள் ஒளிர்கின்றனவா?
ஹெட் லைட்டுகள் ஒழுங்காக ஒளிர்கின்றனவா என்று பார்க்க வேண்டும். ஹெட் லைட் ஒளிரவில்லை என்றால், நீங்களே ஃப்யூஸ் போன பல்பை அகற்றிவிட்டு, புதியதைப் பொருத்திக் கொள்ளலாம்.
பெட்ரோல் நிரப்பிவிட்டு, மூடியை பங்க் ஊழியர் சரியாக மூடுகிறாரா என்று செக் செய்ய வேண்டும். மூடி சரியாக மூடவில்லை என்றால், பெட்ரோல் ஆவியாக வெளியேறிவிடும். அதனால் எப்போதுமே பெட்ரோல் மூடி டைட்டாக மூடப்பட்டிருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும்.
முடிந்தவரை காரை எப்போதுமே நிழலில் நிறுத்துங்கள். காரை வெயிலில் நிறுத்துவதால், காரின் கேபின் சூடாக சீட் கவர் முதல் பிளாஸ்டிக் கவர் வரை சீக்கிரத்திலேயே பழசாகிவிடும்.
எப்போதுமே குறிப்பிட்ட பெட்ரோல் பங்க்கில் மட்டுமே பெட்ரோல் நிரப்புவது நல்லது. என்ன பெட்ரோல் உங்கள் காருக்குச் சரியாக இருக்கும் என்று யூசர் மேனுவலிலேயே இருக்கும். அதற்கேற்றபடியான பெட்ரோல் நிரப்ப வேண்டும்.
விலை உயர்ந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதைவிட, தரமான பெட்ரோல் பங்க்கில் தொடர்ந்து பெட்ரோலை நிரப்புவதே மேல்! விலை அதிகமான பெட்ரோலை உபயோகப்படுத்துவதால், காரின் மைலேஜ் அதிகரித்துவிடாது. பர்ஸின் கனம்தான் குறையும்.
கார் பராமரிப்புக்கு என்று குறிப்பிட்ட தொகையை மாதா மாதம் ஒதுக்குங்கள். அதை எக்காரணம் கொண்டும் வேறு எதற்காகவும் செலவு செய்யாதீர்கள். காரைக் கையாள்வதற்கு முன், அதன் உரிமையாளர் கையேட்டினை (யூசர் மேனுவல்) முழுவதும் படிக்க வேண்டும்.
காரைப் பளிச்சென்று வைத்திருப்பது மட்டுமல்ல காருக்கு சின்னச் சின்னப் பிரச்சனைகள் என்றாலும், அதை உடனடியாக நீங்களே சரிசெய்து, சர்வீஸ் சென்டரிடம் இருந்து பெரிய பில் வராமல் தடுக்க முடியும்.
உங்கள் காரைச் சரியாகப் பராமரிக்க ஒரு ஞாயிற்றுக்கிழமை போதும். ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் செலவழித்தால், உங்கள் கார் எப்போதும் புத்தம் புதுசாக ஜொலிக்கும்.
இதெல்லாம் காரால் வரும் பிரச்சனைகள் என்பதைவிட, காரை அவ்வப்போது கவனிக்காமல் விட்டதால் ஏற்படும் பிரச்சனைகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
“தமிழ் மொழி நிலையானது, தமிழ் கலாச்சாரம் உலகளாவியது” – பிரதமர் மோடி பேச்சு!