தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோடி முதல் முறையாக அரசு முறை பயணமாக இன்று சென்னை வந்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மட்டுமே இடம் பெற்றிருந்தனர். நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தமிழகத்தில் பணிகள் முடிந்த திட்டங்களை துவங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டினார். இந்த திட்ட பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.31,400 கோடியாகும்.
விழாவில் கலந்துகொண்டவர்களை மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். அப்போது அவர் பேசியது: “தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புக்கு இன்று மிக முக்கியமான நாள். தமிழக மக்கள் சார்பாக பிரதமரை வருக வருக என வரவேற்கிறேன். முதலமைச்சரையும் வரவேற்கிறேன்” எனத் தெரிவிக்க திமுகவினரும், பாஜகவினரும் உற்சாக முழக்கம் எழுப்பினர்.
மேலும், மத்திய அரசின் திட்டங்களையும், பயனாளிகளின் விபரம், நிதி ஒதுக்கீடு பற்றியும் அவர் குறிப்பிட்டு பேசினார். இந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாட்டை திருக்குறளை மேற்கொள்காட்டி பேச முயன்றார். அப்போது திடீரென்று அவர் திருக்குறளை மறந்து நின்றார். இருப்பினும் அடுத்த சில வினாடிகளில் அவர் திருக்குறளை நினைப்படுத்தி கூறினார். “சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்” என்ற திருக்குறளை அவர் மேற்கொள்காட்டி ‛சொல்வதை அனைத்தையும் பிரதமர் மோடி செய்து காட்டுகிறார்‛ என புகழாரம் சூட்டினார்.
இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ‛‛ஜிஎஸ்டி நிலுவைத்தொகையை வழங்க வேண்டும். கச்சதீவை மீட்க வேண்டும். நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அலுவல் மொழியாக தமிழ் அங்கீகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்கும்,பொருளாதாரத்துக்கும் தமிழகம் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும்” என்றார்.
அவரை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். அப்போது அவர், ‛‛தமிழ்நாடு வருவது எப்போதும் மகிழ்ச்சிக்கு உரியது. தமிழ்நாட்டு மக்களின் கலாசாரம் சிறப்பு வாய்ந்தது. தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது. சென்னை முதல் கனடா வரை மதுரை முதல் மலேசியா வரை, நாமக்கல் முதல் நியூயார்க் வரை சேலம் முதல் தென்ஆப்பிரிக்கா வரை பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை.
இலங்கை கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. இந்த சூழல் நிச்சயமாக உங்களுக்கு கவலையை தரும். ஒரு நெருங்கிய நண்பனாகவும், அண்டை நாடகவும் இந்தியா இலங்கைக்கு அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி வருகிறது. இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதி மலையக தமிழர்கள் உட்பட அந்நாட்டில் இருக்கும் சகோதர சகோதரிகளுக்கு தனி நபர்கள், இந்திய அமைப்புகள் உதவி செய்துள்ளனர்” என்றார்.
விசா முறைகேடு வழக்கு தொடர்பாக கார்த்திக் சிதம்பரம் நேரில் ஆஜராக உத்தரவு..!!