ஐரோப்பா மற்றும் ஜப்பான் கூட்டணியில் இணைந்து உருவான விண்கலம் ஒன்று சமீபத்தில் புதன் கோளுக்கு அருகில் சென்று புகைப்படமெடுத்துள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் சென்ற வாரம் இணையத்தில் வெளியிடப்பட்டது.
புதன் கோளுக்கு மிக அருகில் சென்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்களை வைத்து விஞ்ஞானிகள் ஒரு புதிய விடயத்தினைக் கண்டறிந்துள்ளனர்.
ஒரு காலத்தில் புதன் கோள் மிகப்பெரியதாக இருந்ததாகவும், ஏதோ ஒரு மோதலின் போது அக்கோளானது உடைந்து தற்போதைய அளவிற்கு வந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
நமது நிலவினை விட சற்று பெரியதாய் இருக்கும் புதன் கோளின் உடைந்த பாகங்கள் பூமியிலும் விழுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஆய்வறிக்கையானது ஹூஸ்டனில் உள்ள அறிவியல் கூடம் ஒன்றினில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அப்ரைட்ஸ் வகை விண்கற்கள்..
பிரான்ஸ் நாட்டிலுள்ள ஆப்ரஸ் (Aubres) என்னும் கிராமத்தில் கிடைத்த விண்கற்கள், இதுவரை புதன் பற்றிக் கிடைத்த தகவல்களோடு ஒத்துப்போவதாய் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்ரைட்ஸ் (Aubrites) எனப்படும் இந்த வகையான விண்கற்களுக்குள் சிறிதளவு உலோகங்கள் கலந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இவை வெளிர் நிறத்தில் காணப்படுகின்றன.
இதுவரை 70,000 விண்கற்கள் உலகில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான விண்கற்கள் செவ்வாய்-வியாழனுக்கு இடையே உள்ள சிறுகோள் தொடர் (asteroid belt) என்னும் பகுதியிலிருந்து வந்தவை ஆகும்.
இதில் குறிப்பிட்ட அளவு விண்கற்கள், சந்திரன் மற்றும் செவ்வாயிலிருந்து வந்தவை. இந்த 70,000 விண்கற்களுக்குள் அப்ரைட்ஸ் வகையறாக்கள் 80 மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் குறைவான அளவாகும்.
‘புதன் கோளில் காணப்படும் தனிமங்களுடன் இந்த அப்ரைட்ஸ் வகை விண்கற்கள் ஒத்துப்போவதாய் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இருப்பினும் இந்த வகைக் கற்கள் புதன் கோளிலிருந்து வந்தவை அல்ல எனப்படும் அனுமானமே தற்போது நடைமுறையில் நம்பப்பட்டு வருகிறது.’ என்று டாக்டர் கமில்லே என்னும் வானியல் விஞ்ஞானி கூறியுள்ளார்.
பூமியைப் போன்று புதன் கோளுக்கு மேல்புற நிலப்பரப்பு இல்லை. முன்னொரு காலத்தில் மிகப்பெரியதாய் இருந்த புதன் கோளுக்கு சிலிகேட் மேற்பரப்பு இருந்ததாகவும், ஒரு பெரிய மோதலினால் இந்த மேற்பரப்பு நீக்கப்பட்டிருக்கும் என்கிற கருத்து பல காலமாகவே வானவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இனி..
இவ்வளவு கருதுகோள்கள் ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தாலும், இதனை நிரூபிக்க புதன் கோளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் நம்மிடம் இல்லை. பெரிய மோதலுக்குப் பிறகு சிதறிய புதன் கோளின் பாகங்கள் ஈர்ப்புவிசையினைப் பொறுத்து பிற கோள்களுக்கு சென்றுள்ளது.
கிட்டத்தட்ட 20 சதவீதம் சிதறிய பாகங்கள் வெள்ளிக் கோளினாலும், ஐந்து சதவீத பாகங்கள் பூமியிலும் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இன்று வரை அப்ரைட்ஸ் வகை கற்கள் புதன் கோளினைச் சேர்ந்தது என்று உறுதியாக ஆராய்ச்சியாளர்களால் கூற முடியவில்லை.
ஒரு வேளை அவை புதன் கோளினைச் சார்ந்தது தான் என்று நிரூபணம் ஆகிவிட்டால் அக்கோளின் பாகங்கள் மனிதர்களின் காலடித்தடம் பூமியில் படுவதற்கு முன்பே வந்தடைந்துள்ளன என்பது நிரூபிக்கப்படும்.
புதன் கோளினைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட ஐரோப்பிய- ஜப்பான் கூட்டணியில் உருவான விண்கலமானது அக்கோளினை 2025ம் ஆண்டிலிருந்து சுற்றத்தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனது மகனின் மதிப்பெண்களை பயணிகளிடம் பகிர்ந்த ஆட்டோ ஓட்டுநர்.. ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்..