ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்/தந்தை. இந்த குறளுக்கு விளக்கம் தேவையில்லை, அனுபவங்களே போதுமானது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தனது மகள்/மகன் ஒரு சிறந்த மனிதனாக வளர்ந்துள்ளான் என்று பிறர் கூற கேட்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். தமது பிள்ளைகளை சரியாக வளர்த்துள்ளோம் என்கிற பெருமையினைப் பெறுவது பெற்றோர்களின் கனவுகளில் ஒன்று.
ஒரு மகளாக/மகனாக இந்த விருப்பத்தினை நிறைவேற்றும்போது ஏற்படும் மகிழ்ச்சியினை பெற்றோர்கள் வெளிப்படுத்தும் தருணத்தினை காணக் கண்கோடி வேண்டும். அத்தகைய நிகழ்வு ஒன்று நேற்று மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது.
ஆட்டோ ஓட்டுனராய்ப் பணியாற்றும் ஒருவரது மகன் அம்மாநிலத்தில் நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில் சிறப்பான மதிப்பெண்களைக் குவித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், தனது ஆட்டோவில் பயணிக்கும் மனிதர்களிடம் மகிழ்ச்சியோடும், பெருமிதத்தோடும் தனது மகனின் மதிப்பெண்களைப் பகிர்ந்துள்ளார்.
கருட் சச்சின் பாலு என்னும் அந்த மாணவர் 600க்கு 592 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். கணிதம் மற்றும் இயற்பியல் படங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆட்டோவில் பயணித்த அனைவரும் அம்மாணவருக்கும் ஆட்டோ ஓட்டுநருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
மாணவரது மதிப்பெண் பட்டியலைப் புகைப்படமெடுத்த விகாஸ் அரோரா என்னும் பயணி ஒருவர் அதனை பிரபல வேலைதேடும் வலைத்தளமான லிங்க்ட்இன்-னில் பகிர்ந்துள்ளார்.
‘இன்று மஹாராஷ்டிராவில் ஒரு உள்ளூர் ஆட்டோவில் பயணிக்கும்போது, ஆட்டோ ஓட்டுனர், தனது மகன் பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் வாங்கியுள்ளார் என்பதினை மிகவும் பெருமையோடு என்னுடன் பகிர்ந்தார். அந்த மாணவர் உண்மையில் சிறந்த அறிவினைப் பெற்றுள்ளார்.’ என்று பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த புகைப்படத்திற்கு பலரும் தங்களது கருத்தினைப் பதிவு செய்து வருகின்றனர். மாணவரின் வருங்காலத்திற்கு உதவிகள் தேவைப்பட்டால் என்னைத் தொடர்பு கொள்ளவும் எனவும், மாணவருக்கு வாழ்த்துக்கள், தனது தந்தைக்கு பெருமையினை சேர்த்துள்ளார் அந்த மாணவர் என்பது போன்ற கருத்துகளும் குவிந்து வருகின்றன.
பருவ நிலை மாற்றத்தினால் அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கடற்பஞ்சுகள்..