உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம்
அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை பயின்று உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு, சமூக நலன் மற்றும் உதவித்தொகையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உறுதித்திட்டத்தின் கீழ், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று, உயர் கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
சான்றிதழ் படிப்பு/ பட்டையப் படிப்பு/ பட்டப்படிப்பு அல்லது தொழிற்கல்வி போன்ற படிப்புகளில் இடை நிற்றல் இல்லாமல், முழுமையாக கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரத்தை, அவர்களின் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இம்மாணவிகள் ஏற்கனவே பிற கல்வித்தொகை உதவிகளை பெற்று வந்தாலும் இதன்மூலம் கூடுதலாக உதவிப் பெறலாம்.
இந்தத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக,
- பெண்களுக்கு உயர்கல்வி அளிப்பதன் மூலம் பாலின சமத்துவத்தை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கம்.
- இந்தத் திட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தை தடுக்க முடியும் என்ற நோக்கம்.
- பெண்களின் இடை நிற்றல் விகிதத்தை குறைக்க முடியும் என்ற நோக்கம்.
- குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க முடியாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல்.
- உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி, அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல்.
- இந்த உயர்கல்வி உறுதித்திட்டத்தின் மூலம் பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல்.
- பெண்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்தல்.
- உயர்கல்வியினால் பெண்களின் திறமையை ஊக்கப்படுத்தி, அனைத்து துறையிகளிலும் பங்கேற்க செய்தல்.
- மேலும், இத்திட்டத்தின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்தல்.
இத்திட்டத்திற்கான தகுதிகள்: உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
- மாணவிகள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழகத்தில் படித்து, உயர்கல்வியை தமிழகத்தில் பயின்று வருபவராக இருத்தல் வேண்டும்.
- மேலும், தனியார்ப் பள்ளிகளில் right to education என்ற பிரிவின் கீழ் 6 வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயின்று பின்பு, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று பின்பு, உயர்கல்வியில் படிக்கும் மாணவிகளும் இத்திட்டத்தின் மூலமாக பயன் பெறலாம்.
- அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், ஆதி திராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலப் பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்ற பள்ளிகளில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.
- மாணவிகள் 8 அல்லது 10 அல்லது 12 வகுப்புகளில் படித்து பின்னர், முதல் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டமானது பொருந்தும்.
- தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு உயர்கல்வி உறுதித்திட்டம் பொருந்தாது.
- 2022-2023 ஆம் கல்வியாண்டில் மாணவிகள், புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
- மேலும், முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவிகளும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டிற்கு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு மாணவிகளும் தொழிற்கல்வியை பொருத்தவரையில், மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளும், மருத்துவக் கல்வியை பொருத்தவரையில், நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
- 2021-2022 ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் மட்டும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. காரணம், ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள், தங்களது இளநிலைப் படிப்பினை நிறைவு செய்துவிடுவார்கள்.
- இத்திட்டத்தின் கீழ் இளநிலைப் படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயன்பெற முடியும். முதுநிலைப் படிப்பு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெற முடியாது.
இத்திட்டத்தைப் பற்றி கூடுதல் தகவல்கள் மற்றும் கேள்விகள் இருப்பின், கட்டணமில்லா 14417 தொலைப்பேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளநிலை கல்வி பயிலும் அனைத்து மாணவிகளும் https://penkalvi.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
நேபாளத்தின் தலைநகரில் பானி பூரி விற்பதற்கு தடை..