காலரா தொற்று அதிகமாகி வருவதால் நேபாளத்தின் தலைநகரான காத்மாண்டுவில் உள்ள லலித்பூர் பெருநகரத்தில் பானி பூரி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலராவினைத் தோற்றுவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ள தண்ணீரினை பானி பூரி செய்வதற்கு உபயோகப்படுத்துவதாகக் கூறி தடை செய்துள்ளது.
மக்கள்தொகை அதிகமுள்ள இடங்களிலும், முக்கியமான பகுதிகளிலும் பானி பூரி விற்பதினைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசானது களமிறங்கியுள்ளது.
இதுவரை 12 பேர் லலித்பூரில் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் மட்டும் ஏழு பேர் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் முடிந்த அளவிற்கு காலரா பற்றிய விழிப்புணர்வினை அந்நாட்டு அரசானது பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.
நோய்த்தடுப்பு இயக்குனர் சமன்லால் கூறியுள்ள தகவலின்படி, காத்மாண்டு மட்டுமல்லாது சந்திரகிரி, புதனில்கந்த போன்ற நகரங்களிலும் காலரா பாதிப்பானது கண்டறியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்கள் சுக்ரஜ் என்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இரண்டு பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
காலரா தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தினை அணுகுமாறு நேபாள நாட்டின் உடல்நல அமைச்சகமானது பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
மழைக்காலம் நெருங்கி வருவதால் டையாரியா, காலரா போன்ற தண்ணீர் மூலம் பரவும் நோய்களிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டு உடல்நல அமைச்சகமானது அறிவுறுத்தியுள்ளது.
இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள நாடுகளில் பானி பூரியானது பெருமளவு மக்களால் அதிகம் விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. எனினும், சுத்தமான முறையில் தரிக்கப்படாத இந்த உணவு வகைகளினால் உடலில் பல்வேறு விதமான நோய்கள் பரவுகின்றன. பல பானி பூரி விற்பவர்கள் அசுத்தமான முறையில் பானி பூரி தயாரிப்பது, விற்பது போன்ற காணொளிகள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.