சென்னையை அடுத்துள்ள வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2000-ஆம் ஆண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறிய பூங்காவிலிருந்து 10 வயதில் மீட்கப்பட்ட மணி என்ற ஆண் சிங்கமானது, வண்டலூர் உயிரியல் பூங்கா வளாகத்தின் எதிரே உள்ள விலங்குகள் மீட்டு மற்றும் புனர்வாழ்வு மையத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போது 32 வயதான மணி ஆண் சிங்கம், வயது முதிர்வு காரணமாக நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. மேலும், அங்குள்ள பூங்கா விலங்கு நல மருத்துவர்கள் உயிரிழந்த சிங்கத்தின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனை செய்து பிறகு உடலை நல்லடக்கம் செய்தனர்.
இதுமட்டுமின்றி, வண்டலூர் பூங்காவில் கடந்த ஆறு மாத காலத்தில், வெவ்வேறு காரணங்களால் ஏழு விலங்குகள் உயிரிழந்துள்ளன. 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 வயதுள்ள சிறுத்தையும், மார்ச் மாதம் அகன்ஷா என்ற 13 வயதுடைய வெள்ளைப்புலியும், மே மாதம் 18 வயது டீனா என்கின்ற வரிக்குதிரையும் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளன. இதே ஜூன் மாதத்தில் பிறந்து சில நாட்களே ஆன காட்டுக்கழுத்தை குட்டி ஒன்றும் உயிரிழந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, சாம்பார் மான், காட்டுப்பன்றி, காட்டு மாடு ஆகிய விலங்குகளும் உயிரிழந்துள்ளன.
அதே போல், கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று உச்சமடைந்து நிலையில், சிங்கம், புலி, வெள்ளைப்புலி, நெருப்புக்கோழிகள் ஆகியவை உயிரிழந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2 ஆண்டுகளாக வண்டலூர் உயிரியல் பூங்காவில், உடல்நலக் குறைவு மற்றும் நோய் தொற்று காரணமாக விலங்குகள் உயிரிழந்து வருவது பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
பருவ நிலை மாற்றத்தினால் அழிவினை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கடற்பஞ்சுகள்..