ஜப்பானில் இன்று மதியம் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டில் இன்று மதியம் 1.39 மணியளவில், மத்திய மீ மாகாணத்தில் சுமார் 350 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக உணரப்பட்டுள்ளது.
மத்திய மீ மாகாணத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டோக்கியோ உள்ளிட்ட பிறநகரங்களிலும் உணரப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், நில நடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள புகுஷிமா மற்றும் இபராக்கி மாகாணங்களிலும் கடுமையான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுவரையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த எந்தவித தகவல்களும் வெளிவரவில்லை. மேலும், சுனாமி எச்சரிக்கையும் விடப்படவில்லை. அதே சமயம், நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளில் புல்லட் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் சிறிது நேரம் நிறுத்திவைக்கப்பட்டது.
கடந்த இரு வாரத்தில், நேபாளம், அந்தமான் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், பஞ்சாப் போன்ற இடங்களில் நிலநடுக்கங்கள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: படுகர் இனத்தில் முதல் பெண் ‘லெப்டினென்ட்’ ! தமிழகத்திற்கு பெருமை சேர்த்த ஊட்டி ராணி