தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகத்தில் காலியாக உள்ள ரிப்போர்ட்டர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
காலியாக உள்ள 9 பணியிடங்களுக்கு தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இந்த பணியிடங்களுக்கு மாத ஊதியமாக ரூ.56,000 – 2,05,700 விதிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு வயதுவரம்பு 32-க்குள் இருக்க வேண்டும்.
அறிவிப்பின்படி, இப்பணிக்கு விண்ணப்பிக்க ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்று தமிழக அரசால் நடத்தப்படும் சுருக்கெழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 180 வார்த்தைகள் சுருக்கெழுத்து எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சில் சீனியர் பிரிவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இப்பணிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சுருக்கெழுத்து திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த பணியிடத்திற்கு தேர்வு நடைபெறும் தேதி 21.12.2022 என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக் கட்டணம் ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலு விவரங்களை அறிய https://www.tnpsc.gov.in/document/english/REPORTER%20ENGLISH.pdf இணையதளத்தை அணுகவும்.