தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகப்படுத்தப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் இன்ஃப்ளுயன்ஸா காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளதாவது:
தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு குறித்த புகார்களுக்கு 104 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் அறிவுறுத்தலின்படி, இரண்டு மாதங்களுக்குள் புதிதாக 4,308 மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவி வரும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த ,தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மூன்று நாட்கள் இருக்கும் இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றத்தால் மட்டுமே ஏற்படுகிறது. இந்தக் காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதேபோல், இந்த மாதம் 30 ஆம் தேதி வரை பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்ற மத்திய அரசின் அறிவிப்பின்படி, பூஸ்டர் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் இதுவரை 94 சதவீதம் பேருக்கு முதல் தவணைத் தடுப்பூசியும் 97 சதவீதம் பேருக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : காணத்தவறாதீர்கள்.. 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் அதிசய நிகழ்வு!