புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவ குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மழைக்கால நிவாரணம் தொகையை முதலமைச்சர் ரங்கசாமி இன்று வழங்கினார்.
புதுச்சேரி அரசு, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் ஆண்டுதோறும் குடும்பம் ஒன்றிற்கு ரூ.2,500/- வீதம் வழங்கப்பட்டு வரும் மழைக்கால நிவாரணமானது நடப்பு (2022) ஆண்டிற்கு முதற்கட்டமாக 17983 மீனவ குடும்பங்களுக்கு ரூ.4,49,57,500/- (ரூபாய் நான்கு கோடியே நாற்பத்து ஒன்பது லட்சத்து ஐம்பத்து ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேற்படி மழைக்கால நிவாரண தொகையினை மீனவ குடும்பங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியினை மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மற்றும் வேளாண் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் முன்னிலையில் முதலமைச்சர் ரங்கசாமி இன்று துவக்கி வைத்தார்.
மேற்படி தொகையானது புதுவை பகுதியைச்சேர்ந்த 9127 குடும்பங்களுக்கும், கரைக்கால் பகுதியைச்சேர்ந்த 3334 குடும்பங்களுக்கும் மாஹே பகுதியைச் சேர்ந்த 515 குடும்பங்களுக்கும் மற்றும் ஏனாம் பகுதியைச்சேர்ந்த 5007 குடும்பங்களுக்கும் இன்று முதல் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மீன்வளத்துறை இயக்குநர் திரு.D.பாலாஜி, மீன்வளத்துறை இணை இயக்குநர் திரு.கு. தெய்வசிகாமணி மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும், முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்று, மேற்படி நிவாரண தொகையானது தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக மழைக்காலங்களிலேயே வழங்கப்படுவது நமது மீனவர்களின் வாழ்வாதார இழப்பினை ஈடு செய்வதற்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
மேலும், உலக மீன்வளம் மற்றும் மீனவர் தினமான இன்று, நமது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த மீனவ குடும்பங்களுக்கு இந்நிவாரண தொகையினை வழங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
நெடுஞ்சாலையில் கட்டுப்பாட்டை இழந்த லாரி; அடுத்தடுத்து 40-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம்…